அடுத்த ஆபத்து.. 'சில்'லான கனடாவில் 120 டிகிரியை தாண்டிய வெப்பம்.. 200 பேர் பலி.. காரணம் என்ன
ஒட்டாவா: கனடாவில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலை காரணமாகக் கடந்த மூன்று நாட்களாக வெப்பம் 120 டிகிரியை கடந்துள்ளது. இதனால் அங்கு 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உலகின் பல பகுதிகளிலும் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான நாடுகளிலும்கூட வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பதால் தென் துருவம், வட துருவம் என இரு துருவங்களிலும் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகிறது. இதனால் கடல் நீரும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

120 டிகிரி வெப்பம்
குளிர்ச்சியான நாடுகளில் ஒன்று கனடா. இங்கு பெரும்பாலும் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. கனடாவில் கடந்த 3 நாட்களாகவே வெப்ப நிலை 120 டிகிரியை கடந்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக அங்களுள்ள மக்களிடம் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

200 பேர் பலி
இந்த வெப்ப அலை காரணமாகக் கனடாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெப்ப நிலை அடுத்த சில நாட்களுக்குக் குறையாது என்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா உள்ளிட்ட பல மாகாணங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையங்கள்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 155 மைல் தொலைவில் உள்ள லிட்டன் கிராமத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 121 டிகிரி பாரன்ஹீட் (49.5 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது. கடும் வெப்பம் காரணமாக அங்குள்ள சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் சில தடுப்பூசி மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் பாதிப்பு
இந்த வெப்ப அலை அமெரிக்காவையும் தாக்கியுள்ளது. அங்குள்ள போர்ட்லேண்ட், ஓரிகான், சியாட்டில், வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் வெப்ப நிலை 110 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகளை விட அமெரிக்கா, கனடா நாடுகளின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக உள்ளதாகக் காலநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன
கனடா நாட்டில் இதற்கு முன்பு வரை 1937ஆம் ஆண்டு பதிவான 113 பாரன்ஹீட் வெப்பமே அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு முடிந்த வரை வெளியே வர வேண்டாம் என்றும் ஏசி ரூம்களிலேயே இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றமே இதுபோன்ற அதிக வெப்பத்திற்குக் காரணம். உலகிலேயே கடந்த 2019ஆம் ஆண்டு தான் அதிக வெப்பம் கொண்ட ஆண்டாக இருந்தது. 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பல நாடுகளில் மாதக்கணக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெப்பநிலை சற்றே குறைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications