காஷ்மீர் எல்லையில் அத்துமீறுகிறதாம் இந்தியா...: பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம்!
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரத்து எல்லையில் நாள்தோறும் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானோ, இந்தியாவே எல்லையில் அத்துமீறுகிறது என்று தன்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இந்திய ராணுவத்தினர் மட்டுமின்றி, எல்லை ஓர கிராம மக்களும் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதை மறைத்து இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நவாஸ் ஷெரீபின் வெளி விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலும் போர் நிறுத்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை 13 பாகிஸ்தானியர் பலியாகி விட்டனர். பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இந்த பிரச்சினையை ஐ.நா.வில் எழுப்புமாறு பாகிஸ்தான் அரசை இந்த சபை கேட்டுக் கொள்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப, காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.