தன்னுயிரைக் கொடுத்து தற்கொலைப்படை தீவிரவாதியை தடுத்த மாணவன்
பெஷாவர்: பாகிஸ்தானில் தான் படிக்கும் பள்ளியை தகர்க்க வந்த தற்கொலைப்படை தீவிரவாதியை தன்னுயிரைக் கொடுத்து தடுத்து நிறுத்திய 14 வயது மாணவனை அரசு ஹீரோவாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கைபர்-படுங்கவா மாகாணம் ஹங்கு மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்சாயில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தவர் ஐட்ஜாஸ் ஹஸன்(14). ஹஸன் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளிக்கு காலதாமதமாக வந்ததால் அவரை காலை வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
காலதாமதமாக வந்ததற்கு தண்டனையாக அவர் பள்ளி நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டார். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் பள்ளி வாயில் நோக்கி வந்தார். அவரை தடுத்து நிறுத்த ஹஸன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினார். ஆனால் அது அந்த நபர் மீது படவில்லை. இதையடுத்து ஹஸன் ஓடிப் போய் அந்த நபரை பிடித்து அவர் பள்ளிக்குள் நுழைய முடியாமல் தடுத்தார். உடனே அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்த சம்பவத்தில் ஹஸன் உயிர் இழந்தார். ஹஸன் அந்த தற்கொலைப்படை தீவிரவாதியை வாசலில் தடுத்து நிறுத்தியதால் பள்ளிக்குள் இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிர் தப்பினர். ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இப்ராஹிம்சாயில் நடந்த இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ ஜாங்வி பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் தன்னுயிரைக் கொடுத்து பல மாணவர்களின் உயிரைக் காத்த ஹஸன் ஒரு சிறந்த வீரர் என்று கைபர்-படுங்வா அரசு தெரிவித்துள்து.