காஷ்மீர் எல்லையில் இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்- பாகிஸ்தான்!: இந்தியா மறுப்பு
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தின் ஆளில்லா ட்ரோன் வகை உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை இந்திய ராணுவமும், விமானப்படையும் மறுத்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ளது பிம்பர் என்ற பகுதி. இங்கு, போட்டோக்கள் எடுப்பதற்காக இந்திய ஆளில்லா ட்ரோன் வகை விமானம் ஒன்று சுற்றிக்கொண்டிருந்ததாகவும், அதை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த நாட்டு பன்சேவை மக்கள் தொடர்பு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் குறிப்பிடும் அந்த இடம், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுக்கு மிக அருகிலுள்ள ஒரு இடமாகும்.

இருப்பினும், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. எல்லைக்கோடு அருகே ட்ரோன் விழுந்ததாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும், ஆனால், இந்திய ராணுவத்தின் ட்ரோன் எதுவுமே சுடப்படவில்லை என்றும் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் கடந்த சில தினங்கள் முன்பு சந்தித்து பேசிக்கொண்ட நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மீது பழிபோடும் அதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி தனது தாக்குதலை நடத்திக்கொண்டே வருகிறது. நேற்று பாகிஸ்தான் படை தாக்கியதில், இந்திய தரப்பில் பொதுமக்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த மாதத்தில் பாகிஸ்தான் நடத்தும் 7வது தாக்குதல் இது. ஏற்கனவே, தீவிரவாதிகளுடன் இணைந்து நடத்திய ஒரு தாக்குதலில் தமிழக வீரர் அனிஷ் வீரமரணம் அடைந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications