பாகிஸ்தானில் நான்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து: 18 பேர் பலி; 150 பேர் படுகாயம்
லாகூர்: பாகிஸ்தான் லாகூர் நகரில் உள்ள 4 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
லாகூர் நகரின் வடமேற்கு பகுதியில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், கட்டுமான பணியில் உள்ள குறைபாடுகளே காரணமாகவே இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, விபத்து நிகழ்ந்த தொழிற்சாலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 40-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் ஏராளமானோர் பலியான இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு கராச்சி நகரில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 289 பேர் உயிரிழந்தனர். அதே நாளில் லாகூரில் உள்ள ஷூ தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 25 பேர் பலியாகினர்.