பாகிஸ்தானில் புதிய ராணுவ தளபதி நியமனம்.. யார் இந்த அஜிம் முனீர்? இம்ரான்கானுடன் மோதியவருக்கு பதவி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அஜிம் முனீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த நிலையில் தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தில் மிகவும் உயர்ந்த பதவியாக ராணுவ தளபதி பொறுப்பு உள்ளது. பாகிஸ்தானை பொறுத்தமட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியலை கூட ராணுவ தளபதிகள் கவிழ்க்கும் திறன் பெற்றவர்களாக உள்ளனர்.
இதனை நமக்கு முந்தைய வரலாறுகள் காண்பித்துள்ளன. இதனால் தான் எப்போதும் பாகிஸ்தானின் ராணுவ தளபதி பொறுப்பு என்பது நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வெறும் 6 ஆண்டு.. ரூ.1,270 கோடியை தொட்ட சொத்து.. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கில்லாடி குடும்பம்-பலே
ஓய்வு பெறும் கமர் ஜாவேத் பஜ்வா
பாகிஸ்தானில் தற்போது ராணுவ தளபதியாக இருப்பவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா (வயது 61) செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பதவியில் நீடித்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக பொறுபேற்ற கமர் ஜாவேத் பஜ்வா நவம்பர் 29ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். 3 ஆண்டுகள் வரை அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் தான் நவம்பர் 29ல் அவர் ஓய்வு பெற உள்ளார்.
அஜிம் முனீர் நியமனம்
இதனால் புதிய ராணுவ தளபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை அந்நாட்டின் அரசு மேற்கொண்டு வந்தது. அதன்படி பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக அஜிம் முனீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் நிலையில் அவர் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
வெளியான அறிவிப்பு
இதேபோல் லெப்டினன்ட் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, சிஜேசிஎஸ்சி எனும் கூட்டு பணியாளர்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய இந்த 2 பொறுப்புகளுக்கான அதிகாரிகளை நியமனம் செய்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
யார் இந்த அஜிம் முனீர்?
இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ எனும் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அஜிம் முனீருக்கும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. அஜிம் முனீர் உளவுத்துறையில் பணியாற்றிய நிலையில் தான் அதில் இருந்து இம்ரான் கான் நீக்கம் செய்தார். இந்நிலையில் தான் அஜிம் முனீர் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் 3 ஆண்டுகள் வரை இந்த பொறுப்பில் செயல்பட உள்ளார். மேலும் இவர் தற்போதைய ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா தலைமயின் கீழ் இந்தியா, சீனா, அமெரிக்கா எல்லையோர பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
ஷெபாஸ் ஷெரீப் முடிவின் பின்னணி?
முன்னதாக ராணுவ தளபதியாக ஓய்வு பெற உள்ள கமர் ஜாவேத் பஜ்வா முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக புகார்கள் இம்ரான் கான் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தான் அவர் பிரதமர் பதவியை இழந்தார். தற்போது மீண்டும் ஆட்சிக்கு வரும் முனைப்பில் இம்ரான் கான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இம்ரான் கானுக்கு நாட்டில் அனுதாப அலையுடன் கூடிய ஆதரவு உள்ளதாக கூறப்படும் நிலையில் தான் அவருடன் மோதல் போக்கில் இருந்த அஜிம் முனீர் பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இம்ரான் கானுக்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுப்பதில் மிகவும் தெளிவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.