இந்தியா-பாகிஸ்தான் நட்புக்கு எதிரி ஆர்எஸ்எஸ் கொள்கை- இம்ரான் கான் கருத்து! தாலிபான்கள் பற்றி "மூச்"
இஸ்லாமாபாத்: இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொண்ட நாடுகளாக மாற முடியாமல் போக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள்தான் காரணம் என்று அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
மத்திய ஆசிய மாநாடு தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தானில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்பதற்காக இம்ரான்கான் வருகை தந்திருந்தார்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
சூப்பர் செய்தி..! வலுவாகும் இந்திய கடற்படை... அமெரிக்காவின் நவீன ஹெலிகாப்டர்கள் கடற்படையில் இணைப்பு
இம்ரான் கான் வருகை
இதையடுத்து இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஊடகங்களும் தாஷ்கண்ட் சென்றிருக்கின்றன. செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ நிருபர் குழு அதில் ஒன்று. இந்த நிலையில்தான் மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நோக்கி ஏஎன்ஐ செய்தி நிறுவன நிருபர் சில கேள்விகளை முன்வைத்தார்.
ஆர்எஸ்எஸ் மீது குற்றம் சொன்ன இம்ரான் கான்
ஒரு பக்கம் தீவிரவாதம் மற்றொரு பக்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை என்ற விஷயம் சரிப்பட்டு வருமா, என்று இம்ரான் கானை பார்த்து கேள்வி எழுப்பினார் நிருபர். இதற்கு பதிலளித்த இம்ரான்கான்.. இந்தியாவுடன் ஒரு முதிர்ச்சியடைந்த நல்ல அண்டை நாடாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் நீண்டகால விருப்பம். ஆனால் என்ன செய்வது? ஆர்எஸ்எஸ் கொள்கை இதற்கு இடையே வந்து அதை தடுத்து விடுகிறது, என்று தெரிவித்து அங்கிருந்து கிளம்பி நடக்கத் தொடங்கினார்.
நிருபரை அனுமதிக்கவில்லை
இருப்பினும் இம்ரான் கானை பின்தொடர்ந்த நிருபர், தாலிபான்கள் மீது பாகிஸ்தானின் கட்டுப்பாடு இல்லையா என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு இம்ரான், பதிலளிக்கவில்லை. அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் நன்றி என்று கூறி அந்த நிருபரை மேற்கொண்டு இம்ரான் கானுடன் பேட்டி எடுக்க நடக்க விடாதபடி தடுத்து நிறுத்தியதை வீடியோ காட்சிகளில் பார்க்க முடிகிறது.
பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
பலமுறை அந்த நிருபர் தொடர்ந்து தாலிபான்கள் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதிலும் இம்ரான்கான் பதிலளிக்காமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார் . ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அங்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தாலிபான்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் துணை அதிபர் வெளிப்படையாக முன்வைத்துள்ளார். இந்த நிலையில்தான் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போதும் இம்ரான்கான் பதிலளிக்காமல் கிளம்பிச் சென்றுவிட்டார்.