அதிகரிக்கும் பலாத்கார சம்பவங்களால் அவசரநிலை அமல்.. பாகிஸ்தான் பஞ்சாப் மகாண அரசின் பகீர் முடிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மகாணத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ‛அவசரநிலை' பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மகாண முதல்அமைச்சராக ஷம்சா ஷாபாஸ் உள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியை சேர்ந்த இவர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மகன் ஆவார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியை இழந்த பிறகு ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆன நிலையில் பஞ்சாப் மகாணத்திலும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து ஷம்சா ஷாபாஸ் முதல்வராக உள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் தான் பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் தினசரி பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆளும் அரசுக்கு இது பிரச்சனையாக உள்ளது. இந்த குற்றத்தை குறைக்க கைது நடவடிக்கை எடுத்தாலும் கூட தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது மக்களையும், ஆட்சியாளர்களையும் கவலையட செய்துள்ளது.
அவசரநிலை அமல்படுத்த முடிவு
இந்நிலையில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கட்டுப்படுத்த அவசரநிலையை பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி பஞ்சாப் உள்துறை மந்திரி அட்டா தரார் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளதாவது:
தினமும் 4 முதல் 5 வழக்குகள்
பஞ்சாப் மாகாணத்தில் தினமும் நான்கு முதல் ஐந்து பலாத்கார சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதை கட்டுப்படுத்துவது அவசியம். இதுபோன்ற குற்றங்களை கையாள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக மகளிர் உரிமைக்கான அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து காவலில் வைத்துள்ளோம். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பது சமூகம் மற்றும் அரசுக்கு கடும் பிரச்சனையாக உள்ளது.
2 வாரத்தில் அவசர நிலை
பாலியல் வன்கொடுமைக்கான எதிர்ப்பு பிரச்சாரத்தை அரசு துவங்கி உள்ளது. பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து எச்சரிக்கப்படுவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. இன்னும் 2 வாரங்களில் அவசரநிலை அமல்படுத்தப்படும்'' என்றார்.
குற்றங்கள் அதிகரிப்பு
உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2021 தரவரிசையின்படி, 156 நாடுகளில் பாகிஸ்தான் 153வது இடத்தில் உள்ளது. பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுதல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகள் ஆகியவையும் பாகிஸ்தானில் பரவலாக அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாகும். 2018ல் பாகிஸ்தானில் 5,048 பெண்களுக்கு பணியிட துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019ல் 4,751 வழக்குகளும் 2020ல் 4,276 வழக்குகளும், மற்றும் 2021 இல் 2,078 வழக்குகள் பதிவாகியுள்ளன.