அரசு கட்டுப்பாட்டில் மசூதிகள்? கொதித்தெழும் மதகுருமார்கள்... போராட்டங்கள் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள மசூதிகளை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இஸ்லாமிய மத குருமார்கள் முடிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு, சமீபத்தில் வக்ஃப் அம்லாக் சட்டம் 2020 என்ற புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. நாடு முழுவதும் உள்ள மசூதிகளையும் மதராசா பள்ளிகளையும் இச்சட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்,
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்தே அந்நாட்டில் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட உள்ளதாக அந்நாட்டின் முக்கிய இஸ்லாமிய மத குருமார்கள் அறிவித்துள்ளனர். இச்சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்,
இந்தச் சட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மதகுருமார்கள், அப்படி அரசு திரும்பப்பெறவில்லை என்றால் இம்ரான் கானுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மியான்மர் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு... இருவர் உயிரிழப்பு.... 30 பேர் படுகாயம்
மேலும், இது குறித்து அவர்கள் கூறுகையில் "மசூதிகளும் மதராசாக்களும் வரலாற்றில் சுதந்திரமாகவே இருந்துள்ளன. இப்போதும் அவை சுதந்திரமாகவே உள்ளன. இனிமேலும் அப்படியே இருக்கும். யாரும் அவர்களின் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது.
கடந்த காலங்களிலும் இது போன்ற முயற்சிகளை அரசு எடுத்தபோதும் நாங்கள் அதை வலுவாக எதிர்த்தோம், இனியும் எதிர்ப்போம். மசூதிகள் மற்றும் மதராசாக்களை பாதுகாக்கும் எங்கள் பணி தொடரும்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.