கோஹினூர் வைரம் எங்களுக்குத் தான் சொந்தம்: உரிமை கொண்டாடும் பாகிஸ்தான் !
லாகூர்: இங்கிலாந்து ராணியின் கீரிடத்தில் உள்ள கோஹினூர் வைரம் எங்களுக்குத் தான் சொந்தம் என்று உரிமை கோரி பாகிஸ்தான் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது கிழக்கு இந்திய கம்பெனி பாஞ்சாப் மாகாணத்தை 1849ஆம் ஆண்டு இணைத்துகொண்டது. அப்போது புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் கைப்பற்றியது. பின்னர் இங்கிலாந்து மகாராணிக்கு அந்த வைரத்தை அன்பளிப்பாக வழங்கியது.
அன்றிலிருந்து இன்று வரை அந்த வைரம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது. இந்த வைரத்துக்கு நீண்ட நாட்களாகவே இந்தியாவும் உரிமை கோரி வருகிறது. மேலும் இந்தியாவுக்கு மீண்டும் இந்த வைரத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஜாவித் இக்பால் ஜாப்ரி தாக்கல் செய்துள்ள மனுவில், மகாராஜா ரஞ்சித் சிங் பேரனிடம் இருந்து வலுக்கட்டாயமாக கோகினூர் வைரத்தை தங்களது ஆட்சி காலத்தில் இங்கிலாந்து எடுத்து சென்று உள்ளது.
1947ம் ஆண்டுக்கு பின்பு ரஞ்சித்சிங் ஆட்சி செய்த பகுதி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டது. அந்த வைரத்தை இங்கிலாந்து ராணி எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது. எனவே, கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுகொள்வதாக கூறிய லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி காலித் மஹ்மூத் கான், இது தொடர்பாக உரிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தார். இந்த மனுவில் இரண்டாம் எலிசபெத் ராணியும், பாகிஸ்தானில் உள்ள இங்கிலாந்து தூதரகமும் பதில் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே இதே கோரிக்கை அடங்கிய மனுவை, கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், தங்கள் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது, என தள்ளுபடி செய்தது. இதையடுத்து மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
நீண்ட நாட்களாகவே இந்தியா கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானும் உரிமை கோரியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.