யுத்த நிறுத்தம் முறிந்தது- இஸ்ரேலின் வெறியாட்டம் உச்சகட்டம்.. பலி எண்ணிக்கை 1,032
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை வெறியாட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 1,032 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த மூவரை பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஒருவரை படுகொலை செய்தது.
ஆனாலும் ஆத்திரம் தீராத இஸ்ரேல், காஸா பகுதி மீது கொடூரமான வான்வழித் தாக்குதல்களை கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறது. அத்துடன் காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
1,032 பேர் பலி
இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 1,032 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. சுமார் 7 ஆயிரம் படுகாயமடைந்துள்ளனர்.
2 லட்சம் பேர் அகதிகள்
மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த மண்ணில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே ரமலான் நோன்பை முன்னிட்டு 12 மணி நேர யுத்த நிறுத்தம் கடந்த சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.
யுத்த நிறுத்தத்தை முறித்த இஸ்ரேல்
ஆனால் யுத்த நிறுத்தத்தை சில மணி நேரம் மட்டுமே கடைபிடித்த இஸ்ரேல் மீண்டும் வெறியாட்டத்தைத் தொடங்கியது. இத்தாக்குதல்களில் கொத்து கொத்தாக அப்பாவி பொதுமக்களும் பிஞ்சு குழந்தைகளும் பலியாகினர்.
பாலஸ்தீன அரசு தகவல்
இது குறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1032 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருப்பதை உறுதி செய்துள்ளது.
42 இஸ்ரேல் வீரர்கள் பலி
இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு எதிராக காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் 43 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.