வானத்தில் பறந்த "நம்ம ஊர் டவுன் பஸ்"....
அட்லாண்டாவிலிருந்து புளோரிடாவுக்கு பயணம் செய்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தின் சீலிங்கில் தண்ணீர் ஒழுகியபடியே பயணி ஒருவர் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருந்து புளோரிடாவுக்கு பயணம் செய்த விமானத்தின் சீலிங்கில் இருந்த ஓட்டை மூலம் தண்ணீர் ஒழுகியதால் புத்தகம் மூலம் தடுத்தப்படியே பயணி ஒருவர் பயணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்ம ஊரில் ஓட்டை, உடைச்சல் பஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை மூலம் தான் வெயிலிலும், மழையிலும் நாம் பயணம் செய்து வருகிறோம். இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டாலும் அதை அரசு கண்டுகொள்வதே இல்லை.
எனினும் பஸ்ஸின் சேவை நமக்கு தேவை என்பதால் வேறு வழியின்றி பயணம் செய்கிறோம். இதுகுறித்து நடத்துநரிடம் கேட்டால் சிலர் பொறுப்பான பதிலை தருவர். ஆனால் இன்னும் சிலரோ நாம் இறங்கிய பிறகு, இவங்க எடுக்கும் ரூ.10 டிக்கெட்டுக்கு சாமியானா பந்தலா போட முடியும் என்று நக்கலாக கேட்பர்.
விமானத்தில் இருந்து இறங்க முடியுமோ?
பஸ்ஸில் நாம் அமர்ந்திருக்கும் இருக்கையின் மேல் உள்ள ஓட்டையால் மழை நீர் ஒழுகினால் வேறு இடத்தில் மாறி அமரலாம். இல்லையெனில் அந்த பஸ்ஸில் இருந்து இறங்கி வேறு ஒரு பஸ்ஸில் செல்லலாம். இதே விமானத்தில் ஒழுகினால் என்ன செய்ய முடியும். அதில் இருந்து பாதியில் இறங்க முடியுமா?. அதுவும் நடுவில் உள்ள விமான நிலையங்களில் யாரும் இறங்காத போது நம்மால் இடம்மாறியும் உட்கார முடியாது.
Full permission to use all content! Thank you pic.twitter.com/AgEAQjR4kz
— Tommy (@TomassoLP) June 30, 2017
புளோரிடாவுக்கு பயணம்
அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருந்து புளோரிடாவுக்கு செல்லும் விமானத்தில் டாம் மெக்கல்லோ தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்தார். டெல்டா ஏர் லைன்ஸில் சென்றபோது விமானத்தின் ஓட்டை சீலிங்கில் இருந்து தண்ணீர் சொட்டியது.
பல பயணிகள் அவதி
இதேபோல் விமானத்தின் பெரும்பாலான இடங்களிலும் தண்ணீர் சொட்டியதால் பல பயணிகள் அவதியடைந்தனர். சீட்டை விட்டு எழ முயன்ற அவர்களை எழக் கூடாது என்று கட்டாயப்படுத்திய விமான ஊழியர்கள் அந்தந்த இருக்கைகளிலேயே அமர வைத்தனர். சீலிங்கில் தண்ணீர் ஒழுகுவது தெரிந்தும் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.
புத்தகத்தால் தடுப்பு
இதையடுத்து வேறு வழியில்லாமல் அமர்ந்த மெக்கல்லோ புத்தகத்தை கொண்டு தன் மீது விழும் தண்ணீரை தடுத்தார். இதை அவரது மகன் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். சுமார் ஒரு மணி நேரமாக தண்ணீரில் ஊறியபடியே பயணம் செய்தனர்.
டிஸ்யூ பேப்பரால் ஓட்டை அடைப்பு
விமானம் தரையிறங்கியதும் விமான ஊழியர்கள் ஒழுகிய ஓட்டையை அடைக்க முயற்சி ஏதும் செய்யாமல் வெறும் டிஸ்யூ பேப்பரால் ஓட்டையை அடைத்ததை கண்டு
பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சீலிங்கில் ஓட்டையால் தண்ணீர் சொட்டி மிகவும் அவதிக்குள்ளான மெக்கல்லோவுக்கு அந்த நிறுவனம் அவர் செலுத்திய 1800 டாலர் விமான கட்டணத்தில் வெறும் 100 டாலர்களை இழப்பீடாக வழங்கியது.