குர்திஷ் பெண் வீராங்கனையை சிறைபிடித்து தலை துண்டித்துக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் கொடூரர்கள்!
கொபேன், சிரியா: குர்திஷ் படையில் இணைந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு வந்த பெண் வீராங்கனை ரெஹேனா என்பவரை உயிருடன் பிடித்து தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
இவரது மரணச் செய்தி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பல்வேறு இணையதளங்களிலும் இந்த மரணச் செய்தி காட்டுத் தீயாக பரவி வருகிறது.
குர்திஷ் படையில் இருந்தபோது நூற்றுக்கணக்கான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கொன்று குவித்தவர் ரெஹேனா என்பது குறிப்பிடத்தக்கது.
குர்திஷ் வீரத்தின் அடையாளம்
குர்திஷ் படையின் வீரத்திற்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இந்த ரெஹேனா. மிகுந்த துணிச்சலுடன் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ரெஹேனா என்பது புணைப் பெயர்
ரெஹேனா என்பது இவரது உண்மையான பெயர் அல்ல. புணை பெயர்தான். சிரிய எல்லையில் இவர் தீவிரமான போரில் ஈடுபட்டிருந்தார்.
100 தீவிரவாதிகளை வீழ்த்திய வீராங்கனை
இவர் தனிப்பட்ட முறையில் 100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பெருமைக்குரியவர் ஆவார்.
டிவிட்டர் மூலம் பிரபலம்
இவர் வெற்றிக்கான இலச்சினையான வி என்று இரட்டை விரலை காட்டும் படம் ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் போட்டு விட உலகம் முழுவதும் பிரபலமானார் ரெஹேனா.
5000 முறை ரீட்வீட்
இந்த டிவிட் 5000 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. ஆனால் அந்த தீரம் மிகுந்த பெண் தற்போது உயிருடன் இல்லை என்று செய்திகள் வருகின்றன.
குர்திஷ் பெண்கள் படையின் வீராங்கனை
ரெஹேனா, குர்திஷ் ராணுவத்தின் பெண்கள் பிரிவில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.
தலை துண்டிக்கப்பட்ட படம்
தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இவரைக் கொன்று தலையைத் துண்டித்து துண்டித்த தலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படங்கள் உலா வருகின்றன. இது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
பயங்கரமான கொபேன் நகரில்
சிரியாவில் உள்ள கொபேன் நகரில்தான் போரில் ஈடுபட்டிருந்தார் ரெஹேனா. இந்த கொபேன் நகரமானது 3 பக்கங்கங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளது. இன்னொரு பகுதியை குர்திஷ் படையினர் தங்கள் வசம் வைத்திருந்து போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அமெரிக்க விமானப்படை அவ்வப்போது தாக்குதல் நடத்தி ஆதரவு தந்து வருகிறது.
ஒரு மாதமாக உக்கிரமான போர்
கடந்த ஒரு மாதமாக இந்த கொபேன் நகரில் தீவிரவாதிகள் உக்கிரமாக தாக்கி வருகின்றனர். ஆனால் குர்திஷ் படையினர், அமெரிக்கப் படையினரின் உதவியுடன் அதை முறியடித்து சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான பெண்கள்
குர்திஷ் படையின் மகளிர் பிரிவில் ஆயிரக்கணக்கான பெண்களும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கு நிகராக இவர்களும் கலக்கி வருகின்றனர்.
10,000 பெண்கள்
இந்த படையானது ஏப்ரல் மாதம்தான் உருவானது. தற்போது 10,000 பெண்கள் இதில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கு.