ஏமனில் தொடரும் அரசியல் வெற்றிடம்... உச்சகட்ட உள்நாட்டு குழப்பம்!
சானா: ஏமன் அதிபரான மன்சூர் ஹதி ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில் அந்நாட்டில் அரசியல் வெற்றிடம் நீடிப்பதால் குழப்பம் தொடருகிறது.
ஏமன் நாட்டில் அதிபராக இருந்த மன்சூர் ஹதி, அமெரிக்கா ஆதரவாளர். அல்கொய்தா இயக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தவர்.
அதிபர் ஹதிக்கு எதிராக ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் பல பகுதிகளைக் கைப்பற்றினர். பின்னர் தலைநகர் சானா, அதிபர் மாளிகையையும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் கைப்பற்றினர்.
இதனால் வேறுவழியின்றி அதிபரான ஹதி பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். ஆனால் நாடாளுமன்றமோ அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை.
மேலும் அந்நாட்டு பிரதமரும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பதால் தற்போது ஆட்சி அதிகாரம் யார் கையில் என்ற குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இதனிடையே ஏமன் பாதுகாப்பு அமைச்சர், உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மாளிகைகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது வசம் வைத்துள்ளனர்.
ஏமனின் இந்த அரசியல் நிலை குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக ஏமன் நிலைமை இருக்கிறது. ஏமனில் அமைதியும் நிலையான அரசும் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவோ, ஏமனின் நிலவரங்கள் குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம் என்றார். இதனிடையே ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கி இருப்பதால் அரேபிய தீபகதற்பத்துக்கான அல்கொய்தா இயக்கம் ஏமனில் செல்வாக்கு செலுத்தும் அபாயம் இருப்பதாகவும் மேற்குலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.