இந்தியாவுக்கான தூதராகிறார் அமெரிக்கா வாழ் இந்தியரான ரிச்சர்ட் வெர்மா!
வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வெர்மாவை நியமிக்க அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படும் முதல் அமெரிக்கா வாழ் இந்தியர் ரிச்சர்ட் வெர்மா.
இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதராக இருந்த நான்சி போவெல் மார்ச் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இந்திய தூதரக அதிகாரியாக இருந்த தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் நான்சியின் தலையீடு அதிகமாக இருந்ததாக எழுந்த சர்ச்சையால் அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதனையடுத்து புதிய தூதரை தேர்வு செய்யும் பணியில் அமெரிக்க செனட் சபை இறங்கியது. இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்கா வாழ் இந்தியரான ரிச்சர்ட் வெர்மாவை ஒபாமா நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் இந்தியாவுக்கான அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட 50 பேருக்கும் மேற்பட்டோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் இந்திய-அமெரிக்க உறவுக்கு வலுசேர்க்கும் வகையில் ரிச்சர்ட் வெர்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
ரிச்சர்ட் வெர்மாவின் பெற்றோர் 1960களில் அமெரிக்காவில் குடியேறினர். 2008ஆம் ஆண்டு முதல் ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார் வெர்மா. ஒபாமா அரசில் 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாநில சட்ட விவகாரங்கள் துறையில் துணைச்செயலாளாராக ரிச்சர்ட் வெர்மா பணியற்றினார்.
தற்போது தனியார் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அமெரிக்க செனட் சபை ரிச்சர்ட் வெர்மாவின் நியமனத்தை உறுதி செய்துள்ளதால் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றும் முதல் அமெரிக்கா வாழ் இந்தியர் என்ற பெருமையை ரிச்சர்ட் வெர்மா பெற்றுள்ளார்.