2வது நாளாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல்..பள்ளியில் குண்டுமழை பொழிந்த ரஷ்யா..400 பேரின் நிலை?
கீவ் : உக்ரைன் நாட்டின் மீது 2வது நாளாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், 400க்கும் மேற்பட்ட மக்கள் பதுங்கியிருந்த பள்ளி மீது போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து உக்ரைன் ராணுவமும், அந்நாட்டின் மக்களும் தீவிரமாக போராடி வருகிறது.
நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் தந்து உதவும் நிலையில், உக்ரைனுக்கு அவ்வாறு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் தரக்கூடாது என்று ரஷ்யா கண்டித்துள்ளது.
'தெரியாம சுட்டு இருப்பாங்க' துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்யா ராணுவம்.. ஒரு கையை இழந்த சிறுமி உருக்கம்
ஹைப்பர்சோனிக் ஏவுகணை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. MiG-31 போர் விமானங்கள் மூலம் செலுத்தப்படும் கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் படைத்தவை.
கிளர்ச்சியாளர்கள் ஆதரவு
ரஷ்ய ராணுவத்துடன் கூட்டு வைத்துள்ள உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், மரியுபோல் நகருக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் எந்நேரமும் அந்நகரை ரஷ்யா கைப்பற்றி விடும் என தெரிகிறது. இது மட்டுமல்லாமல் உக்ரைனை கருங்கடலுடன் இணைக்கும் அசோவ் கடல் பகுதிக்கு தற்காலிகமாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
115 குழந்தைகள்
தலைநகர் கீவ் மற்றும் மைகோலைவ் நகரங்களை சுற்றி வளைக்கும் ரஷ்யாவின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது. எனினும் கார்கிவ், செர்னிஹிவ், சுமி மற்றும் மரியுபோல் நகரங்களில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன இந்நிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்திய தாக்கிதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் போர் விதிமுறைகளை மீறி தக்குதல் நடத்தப்படுவதாகவும், போர் குற்றத்தில் ரஷ்யா ஈடுபடுவதாகவும் ஐநா உள்ளிட்ட அமைப்புகள் கூறி வருகின்றன.
பள்ளி மீது தாக்குதல்
இந்நிலையில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பதுங்கியிருந்த பள்ளி மீது போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. 400 பொதுமக்கள் தங்கியிருந்த கலைப் பள்ளியின் மீது ரஷ்யா குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக மரியுபோல் நகர நிர்வாகம் கூறியுள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் போரினால் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் "பேரழிவுகரமான" போரால் 10 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐநா அகதிகள் அமைப்பான UNHCR தெரிவித்துள்ளது.