World War III : தீயில் எண்ணெய் ஊற்றும் நேட்டோ! மூன்றாம் உலகப் போர் ஆபத்து? எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
மாஸ்கோ : உக்ரைன் நாட்டின் நடவடிக்கைகள் மூன்றாம் உலகப்போரை தூண்டுவது போல் இருப்பதாகவும் அதே நேரத்தில் அந்த நாட்டுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் என ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.'
Recommended Video
நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை சேர்க்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டின் மீது திடீரென போர் தொடுத்தது. போர் தொடங்கி இரண்டு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
நாட்டின் மிக முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யப் படைகள் கிட்டத்தட்ட கைப்பற்றிய நிலையில் மற்ற இடங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது . குறிப்பாக கிழக்கு பகுதிகளில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ரஷ்யப் பெருமுதலாளிகள் பல்லாயிரம் கோடி டாலர்களை எங்கே ஒளித்து வைத்துள்ளார்கள்?
உக்ரைன் போர்
மேற்கத்திய நட்பு நாடுகள் மற்றும் அமெரிக்கா உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்கியுள்ளது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், அங்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளால் அந்நாட்டு மக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக சொந்த நாட்டு மக்களே போராடுவதை காண முடிந்தது. இதனால் அங்கு சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னேறும் ரஷ்யா
இதற்கிடையில், லுகான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரேனிய நகரமான கிரெமின்னாவை பல நாட்கள் சண்டைக்குப் பிறகு ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கிரெமின்னா நகரம் வீழ்ந்ததாகவும், ரஷ்யப் படைகள் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க் நகரங்களை நோக்கி முன்னேற முயற்சிப்பதால், ஐசியத்திற்கு தெற்கே கடுமையான சண்டை நடந்து வருவதாக பிரிட்டிஷ் இராணுவம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து உக்ரைன் அரசாங்கம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
உக்ரைன் வெற்றி பெறுகிறது
ரஷ்யா தோல்வியடைகிறது. உக்ரைன் வெற்றி பெறுகிறது என்று திங்களன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். அவரும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக கீவ் சென்ற நிலையில், 165 மில்லியன் டாலர் வெடிமருந்து விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கூடுதல் ஆயுதங்களை வாங்குவதற்கு $300 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கும் என்று பிளிங்கன் கூறினார்.
செர்ஜி லாவ்ரோவ் பதிலடி
இந்நிலையில் அமெரிக்காவுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "உக்ரைன் தொடர்ந்து சண்டையிடுவதை மேற்குலகம் விரும்புவதாகவும், ரஷ்ய இராணுவம் சோர்வடைவதாக மற்ற நாடுகள் சொல்வது மாயை எனக் கூறினார். மேற்கத்திய நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்கள் எங்களது இலக்காக இருக்கும் எனவும், ரஷ்யப் படைகள் மேற்கு உக்ரைனில் உள்ள ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தக்கி வருகின்றன.
மூன்றாம் உலகப் போர் ஆபத்து?
நேட்டோ பினாமிகள் மூலம் ரஷ்யாவுடன் போரில் நுழைந்து, அந்த பினாமிகளுக்கு ஆயுதம் கொடுத்து வருகிறது என்றும், நேட்டோ படைகள் "நெருப்பில் எண்ணெயை ஊற்றுகின்றன" என்று லாவ்ரோவ் கூறினார். மேலும் அமெரிக்கா கூடுதல் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதால் மூன்றாம் உலகப் போரின் "உண்மையான" ஆபத்து உள்ளது எனவும், அதே நேரத்தில் உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கள் தொடரும் எனவும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.