"அவ்வளவு தான்.. 3ஆம் உலக போர் தொடங்கிவிட்டது!" உக்ரைனின் திடீர் தாக்குதல்.. பாய்ந்து வரும் ரஷ்யா
மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கிய போர்க் கப்பல்களில் ஒன்றான மோஸ்கவா மூழ்கி உள்ள நிலையில், இது தொடர்பாக ரஷ்ய அரசு செய்தி ஊடகங்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போர் தொடங்கியது முதலே இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நடப்பது அதற்கு நேர் மாறாக உள்ளது.
பறந்து வந்த ஏவுகணை! தீக்கிரையாகி மூழ்கிய ரஷ்ய போர்க் கப்பல்! முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷ்யா!
மோஸ்கவா கப்பல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யக் கடற்படையின் முக்கிய கப்பல்களில் ஒன்றான மோஸ்கவா கப்பலைக் குறி வைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட தீவிபத்தில் அந்தக் கப்பல் மிக மோசமாகச் சேதமடைந்து உள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த இந்த கப்பல் அப்படியே மூழ்கிவிட்டது. இது ரஷ்யா ராணுவத்திற்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
3ஆம் உலகப் போர்
இந்நிலையில், உக்ரைன் போரில் மோஸ்கவா கப்பல் தாக்கப்பட்டதன் மூலம் மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் முக்கிய போர்க் கப்பல்களில் ஒன்றான இதை தாங்கள் தான் தாக்கி அழித்தாக உக்ரைன் ராணுவம் கூறி வரும் நிலையில், ரஷ்ய அரசு செய்தி ஊடகம் இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கியது என உறுதியாகச் சொல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
போர் இல்லை
ரஷ்யா இப்போது நேட்டோ உட்கட்டமைப்பிற்கு எதிராகப் போராடுவதாகவும் மோஸ்கவா கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது ரஷ்ய மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இணையானது என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நபர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையைப் போர் என்று குறிப்பிட முடியாது என்றும் அது சிறப்பு ராணுவ நடவடிக்கை தான் என்றும் குறிப்பிட்டார்.
மேற்குலக நாடுகள்
அதேபோல ரஷ்யாவின் மற்றொரு அரசு ஊடகத்தில், "மேற்கத்திய நாடுகளின் தூண்டுதல் அடிப்படையிலேயே ரஷ்யா தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வரும் காலத்தில் இது போன்ற நடவடிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மேற்குலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது என்றும் கூறப்பட்டு உள்ளது.
ரஷ்யா தரப்பு
ரஷ்யாவின் இந்த மோஸ்கவா கப்பலை தாங்கள் தான் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், ரஷ்யா தங்கள் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மோஸ்கவா கப்பலில் மோசமான தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே இந்த கப்பல் மூழ்கியதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
உக்ரைன் ராணுவம்
கீவ் நகரில் இருந்து ரஷ்யா தனது ராணுவத்தைக் குறைத்துக் கொண்டது. அதேநேரம் உக்ரைனின் மரியுபோல் நகரைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியில் ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் ரஷ்யா கடற்படையின் முக்கிய கப்பல் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.