307 வருட உறவு பிரிகிறது.. பிரிட்டனை விட்டு விடைபெறும் ஸ்காட்லாந்து.. செப். 18ல் வாக்கெடுப்பு
எடின்பர்க்: 307 வருடகால உறவை முறிக்கத் தயாராகி விட்டனர் ஸ்காட்லாந்து மக்கள். கிரேட் பிரிட்டன், பிரிட்டன், யுனைட்டெட் கிங்டம் என்று பல்வேறு பெயர்களில் அதிகாரப்பூர்வமாகவும், இங்கிலாந்து என சுருக்கமாகவும் அழைக்கப்படும் யு.கே. என்ற கூட்டமைப்பிலிருந்து விலகி தனி நாடாக செயல்பட ஸ்காட்லாந்து மக்கள் முடிவு செய்துள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யும் வாக்கெடுப்பு செப்டம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது.
ஸ்காட்லாந்து தனியாக பிரிய முடிவெடுக்கப் போவதை இங்கிலாந்து சோகத்துடன் கவனித்து வருகிறது.
இருப்பினும் இந்த விஷயத்தில் தான் தலையிடப் போவதில்லை என்று இங்கிலாந்து ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஸ்காட்லாந்து தனியாகப் பிரிந்தால் அது தனக்கு நிச்சயம் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
50 லட்சம் மக்களின் நாடு
கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கிரேட் பிரிட்டனின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து தற்போது இருக்கிறது.
நான்கு தேசங்களின் நாடு இங்கிலாந்து
கிரேட் பிரிட்டன் என்பது - இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு தேசங்களின் இணைந்த கூட்டணிதான். முன்பு அயர்லாந்து முழுமையாக பிரிட்டனுடன் இணைந்திருந்தது. பின்னர் அதில் வடக்கு அயர்லாந்தைத் தவிர பிற பகுதிகள் மட்டும் தனியாக, தனி நாடாக பிரிந்து போய் விட்டது.
307 வருட கால பிணைப்பு
கடந்த 307 வருடமாக ஸ்காட்லாந்து, பிரிட்டனுடன் இணைந்துள்ளது. தற்போது அது தனி நாடாகப் பிரிந்து போக முடிவு செய்து விட்டது.
சோகத்தில் இங்கிலாந்து
ஸ்காட்லாந்து மக்களின் விருப்பம், இங்கிலாந்து நாட்டவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்காட்லாந்து பிரியப் போகிறதா, நம்பவே முடியவில்லை என்று இங்கிலாந்து மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் உள்ளனர். ஆனால் ஸ்காட்லாந்து பிரிய அந்தப் பகுதி மக்களில் பலரும் விரும்புகிறார்கள்.
நமக்கு நல்லது ...
ஸ்காட்லாந்தை தற்போது ஆட்சி செய்து வரும் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைமையிலான ஸ்காட்லாந்து அரசுத் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வாய்ப்பாகும். ஆம் என்று நாம் சொன்னால், ஸ்காட்லாந்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவு, அதிகாரம், ஸ்காட்லாந்து மக்களிடமே இருக்கும். இந்த முடிவு நமக்கு நல்லது, நமது நாட்டுக்கு நல்லது, நமது மக்களுக்கு நல்லது என்று கூறப்பட்டுள்ளது.
போகாதீங்க, ப்ளீஸ்!
அதேசமயம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன், ஸ்காட்லாந்து பிரியும் முடிவைக் கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த யுனைட்டெட் கிங்டத்தின் ஒரு பகுதியாக அது தொடர வேண்டும். அதுதான் அவர்களது பாதுகாப்புக்கும் நல்லது. மீறி முடிவெடுத்து விட்டு பின்னர் வருந்துவதில் பயன் இல்லை என்று எச்சரிக்கை கலந்த கோரிக்கையை விடுத்துள்ளார் காமரூன்.
எழுதப்பட்ட அரசியல் சாசனம் இல்லாத யு.கே.
யு.கே. எனப்படும் யுனைட்டெட் கிங்டத்திற்கென எழுதப்பட்ட அரசியல் சாசனம் இல்லை என்பதால் இந்தக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வரும் நாடுகள் தேவைப்பட்டால், விரும்பினால் பிரிந்து போய் விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் பலம் குறையும்
ஸகாட்லாந்து பிரிந்து போனால் அது இங்கிலாந்தை பலமாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதன் தலைநகர் லண்டனை, தொடர்ந்து சர்வதேச நிதித் தலைநகராக சர்வதேச சமுதாயம் கருதாமல் கைவிட்டு விடும் அபாயம் உள்ளது. இது இங்கிலாந்தின் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.
எல்லாமே பாதிக்கும்
கடந்த மாதம் பல்வேறு முக்கியத் துறைகளைச் சேர்ந்த 130 வர்த்தகத் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட ஒரு பகிரங்கக் கடிதத்தில், நாணயம், வரி, ஓய்வூதியம், ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் பதவி உள்ளிட்ட பல விஷயங்களில் இங்கிலாந்து கடும் பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவித்திருந்தனர். அதேசமயம், இவர்கள் ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிந்து போவதற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆதரவு அதிகம்
ஸ்காட்லாந்து பிரிந்து போக ஆதரவும் பெருகி வருகிறது. ஸ்காட்லாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் அதிகம் காணப்படுகின்றன. இதுதான் இங்கிலாந்து மக்களைக் கவலைக்குள்ளாகியுள்ளது.
முதல் கருத்துக் கணிப்பில் பவுண்டு பனால்!
ஸ்காட்லாந்து தொடர்பான முதல் கருத்துக் கணிப்பில் எஸ் என்ற கருத்துக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் பவுண்டுக்கு மதிப்பு சரிந்தது.
பாதுகாப்பும் பலவீனமாகும்
மேலும் ஸ்காட்லாந்து பிரிந்தால், இங்கிலாந்தின் பாதுகாப்பும் பலவீனத்தைச் சந்திக்கும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஸ்காட்லாந்தில் வைத்திருக்கும் ஆணு ஆயுதங்களை அகற்றி விடுமாறு இங்கிலாந்து அரசை ஸ்காட்லாந்து அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்தின் பாஸ்லேன் பகுதியில் தற்போது இங்கிலாந்து தனது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் பிரிவை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதம் தேவையில்லை
இதுகுறித்து ஸ்காட்லாந்து கூறுகையில், சுதந்திர ஸ்காட்லாந்து நாடாக, நாங்கள் அணு ஆயுதம் இல்லாத நாடாக இந்த உலகில் உலவ விரும்புகிறோம். இதன் அடிப்படையில்தான் நாங்கள் நேட்டோ அமைப்பிலும் இணைவோம் என்று கூறியுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகள் பிரியும்
ஸ்காட்லாந்து பிரியப் போவதை தற்போது ஸ்பெயினின் கடலோனியா மாகாணத்தில் தனி நாடு கோரி வருவோரும், கனடாவின் கியூபெக் மக்களும், பிரான்சின் கோர்சியா பகுதியினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இவர்களும் தனி நாடாக பிரிய நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காமரூன் பதவிக்கும் ஆபத்து
ஸ்காட்லாந்து தனியாக பிரிய முடிவு செய்தால் இங்கிலாந்து பிரதமர் காமரூன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வரும் என்று தெரிகிறது. காரணம், காமரூனால் ஸ்காட்லாந்து பிரிவினையை தடுக்க முடியவில்லை என்று ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
16 வயது முதல் அனைவரும் வாக்களிக்கலாம்
ஸ்காட்லாந்தில் 16 நிரம்பியவர்கள் வாக்களிக்க உரிமை உள்ளது. அந்த வகையில் ஸ்காட்லாந்து குடிமக்கள், 16 வயது நிரம்பியோர் வாக்களிக்கவுள்ளனர். மேலும் ஸ்காட்லாந்தில் வசிக்கும், 16 வயது நிரம்பிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் குடிமக்களும் கூட வாக்களிக்கலாம். அதேசமயம், ஸ்காட்லாந்தை விட்டு வெளியில் வசிப்போரால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது. இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் வசிப்போர் இதில் பங்கேற்க முடியாது.
1707ல் இணைந்த நாடு
ஸ்காட்லாந்து, யுனெட்டெட் கிங்டத்தின் ஒரு பகுதியாக 1707ம் ஆண்டு சட்டத்தின் மூலம் இணைந்த நாடாகும். ஆனால் பல முக்கிய முடிவுகளுக்கு அது லண்டனை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் தனி நாடாக பிரியும் மன நிலை ஸ்காட்லாந்து மக்களிடையே உருவானது.
2012ல் வாக்கெடுப்புக்கு முடிவு
இதுதொடர்பாக பலமுறை பிரச்சினைகள் கிளப்பப்பட்டன. இறுதியாக 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்த இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் இணைந்து முடிவெடுத்தன.