ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அச்சத்தில் பெற்றோர்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்ட பள்ளிகளில் பலவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பல பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பல பள்ளிகள் இன்று தான் திறக்கப்பட்டன. மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் பல்வேறு பள்ளிகளுக்கு இன்று காலை போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளிகள் மாணவ, மாணவியரை அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு பள்ளிகளை மூடின. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளிகளுக்கு சென்று குண்டுகள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.
நியூ சவுத் வேல்ஸில் வெடிகுண்டு மிரட்டலால் 7 பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் பென்ரித், ரிச்மண்ட், மோனா வேல், அம்பர்வேல், வூலூவேர், உல்லாடுல்லா, லேக் இல்லாவாரா, சிட்னி, மெல்போர்னிலும் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
விக்டோரியாவில் குறைந்தது 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை விடுக்கப்பட்ட அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களும் போலியானது என்றும், எந்த பள்ளியும் குண்டு இல்லை என்றும் ஆஸ்திரேலிய மீடியாக்கள் தெரிவித்துள்ளன.