மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பி வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவும் சீக்கியர்கள்
மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பி அகதிகளாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சீக்கியர்கள் உதவி வருகின்றனர்.
டெக்னாஃப்: மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பி வங்கதேசத்துக்கு அகதிகளாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு குடிநீர், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளை வழங்கும் பணியில் கல்சாஎய்ட் எனும் சீக்கிய அமைப்பு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மியான்மரில் வங்கதேச நாட்டவராக கருதப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மியான்மர் ராணுவத்துடன் பவுத்த பேரினவாதிகளும் இணைந்து அட்டூழிய இனப்படுகொலையை நடத்தி வருது உலகை அதிரச் செய்துள்ளது.
இதனால் 3,00,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு தப்பி அண்டை நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்துக்கு அதிகளாக வந்து சேரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஐநா அகதிகள் அமைப்பு மட்டுமே உதவி வருகிறது.
இந்நிலையில் சீக்கியர்களின் கல்சாஎய்ட் என்கிற அமைப்பும் அகதிகளுக்கு உதவும் பணியில் ஞாயிறு முதல் ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டது இந்த அமைப்பு.
இதன் இந்திய இயக்குநர் அமர்பிரீத்சிங் தலைமையிலான குழுவினர் மியான்மர்- வங்கதேச எல்லையான டெக்னாஃப் பகுதியில் முகாமிட்டு அகதிகளுக்கு உதவி வருகின்றனர். படகுகளில் தப்பி வரும் அகதிகளுக்கு தேவையான குடிநீர், உணவு, முகாம்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இந்த அமைப்பினர் செய்து வருகின்றனர்.
தன்னார்வ அமைப்புகள் எதுவுமே கண்டுகொள்ளாத நிலையில் பசியாலும் பட்டினியாலும் உயிரை கையில்பிடித்துக் கொண்டு அகதிகளாக ஓடி வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவிக் கரம் நீட்டிய சீக்கியர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டும் குவிந்து வருகிறது.