வந்தாச்சு கொரோனா 3வது அலை.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. உடனே சுதாரிக்குமா இந்தியா?
டர்பன்: தென்ஆப்பிரிக்காவில் கொரோனா மூன்றாவது அலை துவங்கி விட்டதாக அந்த நாட்டின், தொற்றுநோய் தேசிய இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையை ஒப்பிட்டால், இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அதிலும் நடுத்தர வயது நபர்களை கூட மோசமாக தாக்கி உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் போதிய தடுப்பூசிகள் இல்லாததால் அதையும் முழுமையாக முடிக்க முடியாமல் திணறி வருகிறோம்.
கேஸ்கள் அதிகரிப்பு
இந்த நிலையில்தான் தென்னாப்பிரிக்காவில் மூன்றாவது அலை துவங்கி விட்டதாக அந்த நாட்டு தேசிய தொற்றுநோய் இன்ட்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.கடந்த ஏழு நாட்கள் நோய் பாதிப்பு சராசரி சுமார் 6000 கேஸ்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாவது அலையில் உச்சகட்ட பாதிப்பின் போது இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது 30% என்று கூறப்படுகிறது. இந்த கணக்கை வைத்து பார்க்கும் போது அங்கு மூன்றாவது அலை துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசிட்டிவ் ரேட்
பாசிட்டிவ் டெஸ்டிங் ரேட் 15.7 சதவீதமாக இருக்கிறது. அதாவது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திவிட வேண்டும் என்று அந்த நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
Recommended Video
தடுப்பூசி இயக்கம்
முதலில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது அந்த நாட்டின் திட்டமாக இருக்கிறது. இதில் இப்போது முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் கட்டம் அங்கே உள்ளது. இதன்பிறகு அத்தியாவசிய தேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் , 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆனால் இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி போடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் மூன்றாவது அலை அங்கு பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதாரிக்குமா இந்தியா?
இதனிடையே கொரோனா மூன்றாவது அலை வருவது நிச்சயம் என்பதால் அதனை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் டெல்லி அரசு தயாராகி வருகிறது என்று அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க மூன்றாவது அலையை தடுக்க இப்போதே தயாராக வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனென்றால் நாம் என்னும் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் மக்களுக்கு கூட தடுப்பூசியை செலுத்தவில்லை என்பதால் மூன்றாவது அலை வரும்போது அதை எதிர்கொள்வதற்கு தேவையான நோய்த்தடுப்பு ஆற்றல் பெரும்பாலான மக்களுக்கு இருக்காது. எனவே அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். வேகமாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் சுகாதாரத் துறை வல்லுனர்கள்.