தென் கொரியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி.. வட கொரியா மிரட்டலால் பதற்றம்!
சியோல்: வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலையும் மீறி அமெரிக்காவும், தென் கொரியாவும் தனது வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியை திங்கள்கிழமை தொடங்கியுள்ளதால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து ஆண்டுதோறும் வருடாந்திர ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டும் வழக்கமான வருடாந்திர போர்ப்பயிற்சியை அமெரிக்காவும் தென் கொரியாவும் தொடங்கி உள்ளன. இதில் தென்கொரிய ராணுவத்துடன், 25 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் கலந்து கொண்டனர். இது வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வட கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்காவும், தென் கொரியாவும் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சி, வட கொரியா மீது படையெடுப்பதற்கான ஒத்திகையே. எனவே, எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் எங்கள் முப்படைகள் தயார் நிலையில் உள்ளன.
எங்கள் நாட்டின் இறையாண்மைக்குத் துளி குந்தகம் விளையும் என்று தோன்றினாலும், அது எங்களது முன்கூட்டிய அணுகுண்டுத் தாக்குதலுக்குக் காரணமாக அமையும் என்றார் அவர். ஆண்டுதோறும் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி தற்காப்பு நிலையை பலப்படுத்துவதற்காகவே நடத்தப்படுகிறது என்று அமெரிக்காவும், தென் கொரியாவும் கூறி வருகின்றன.
எனினும், அந்தப் பயிற்சியை தங்கள் மீது படையெடுப்பதற்கான ஒத்திகையாகவே வட கொரியா கருதி வருகிறது. ஏற்கெனவே இதுபோன்ற சூழல்களில் வட கொரியா பல முறை அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.