ஒரே பரபரப்பு.. சூடானில் ராணுவ புரட்சி.. பிரதமர் சிறைபிடிப்பு.. அமைச்சர்கள் கைது
சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டொக் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார்
சூடான்: சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டொக் அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெரும் பரபரப்பை அந்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது.
ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிகப்பெரிய நாடு சூடான்.. இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் இஸ்லாத்தை கடைப்பிடிப்பவர்கள்.
சூடானில் 30 வருடங்களாக அதிபராக இருந்தவர் உமர் அல் பஷீர்.. இவர் கடந்த 2019-ல் பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் பதவி விலகினார்..
சூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து அறிய அவசர எண் அறிவிப்பு
பொதுமக்கள்
இதற்கு பிறகு, பொதுமக்களும் ராணுவமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.. அதில், அப்துல்லா ஹம்டொக் பிரதமராக பதவியேற்றார்... ஆனால், இப்போது ராணுவமோ தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது.. அதாவது மொத்த நாட்டையும் தாங்களே ஆள வேண்டும் என்பதால், ஆட்சியை முழுமையாக கைப்பற்ற முயற்சிகளை எடுத்து வருகிறது.. இதனால் நிறைய போராட்டங்களும் நடந்தன.
நெருக்கடி
இதையெல்லாம் பார்த்து மனம் வெதும்பிய பிரதமர் அப்துல்லா ஹம்டொக், நாடு ரொம்ப ஆபத்தான, அரசியல் நெருக்கடியில் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.. இதனிடையே, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், இடைக்கால அரசை கவிழ்க்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.. இந்த காரியத்தை செய்தது, ராணுவத்தில் உள்ள அல் பஷீரின் விசுவாசிகள் தான் என்றும் செய்திகள் கசிந்தன. இது அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
கைது
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று காலை பிரதமர் மாளிகைக்குள் நுழைந்த ராணுவத்தினர் சிலர் பிரதமரை கைது செய்ததாக கூறப்படுகிறது... அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் பிரதமர் அப்துல்லா ஹம்டொக சிறைப்பிடித்து விட்டதாகவும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.. பிரதமருடன் சேர்த்து, 4 அமைச்சர்கள், பிரதமரின் ஊடக ஆலோசகர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பு
அதாவது, தொழில்துறை அமைச்சர் இப்ராகிம் அல்-ஷேக், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஹம்சா பலூல் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் பைசல் முகமது சாலே உள்ளிட்டோர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... சூடானின் தலைநகருக்கு செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சூடான் நாட்டில் பெரும் பரபரப்பு சூழ்ந்துள்ளது.