ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான் தாக்குதல்: துப்பாக்கி சண்டையில் 3 பேர் சாவு
காபூல்: நேட்டோ படைகளுக்கு எரிபொருள் ஏற்றி வந்த லாரிகளை குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் மூன்றுபேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு நன்ஹர்கர் மாகாணத்தில், தோர்காம் எல்லை பகுதியில் நேட்டோ படைகளின் அவுட் போஸ்ட் செயல்பட்டுவருகிறது. இங்குதான் நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பல பொருட்கள் சப்ளையாகும்.இன்று காலை நேட்டோ படைகளுக்காக எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரியொன்று இப்பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு வந்த 3 தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் தொடங்கினர். நேட்டோ படையினர் திருப்பித்தாக்கினர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாதி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார். மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் அகமது ஜியா அப்துல்ஜாய் கூறுகையில், தீவிரவாதிகள் தாக்குதலில் 37 எரிபொருள் வாகனங்கள் தகர்க்கப்பட்டன என்றார். இதனிடையே இத்தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.