'ஆப்கனில் நிலவும் அமைதியை.. சீரழிக்க முயலும் அமெரிக்கா..' தாலிபான் பரபர குற்றச்சாட்டின் முழு பின்னணி
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நெருக்கடியால் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், இந்த தேவையற்ற குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று தாலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆபன்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், சில வாரங்களில் நாட்டை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிவிட்டனர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்,
20 ஆண்டுகளாக அமைதியாக இருந்த தாலிபான்கள் இந்தளவு வலிமையாக இருப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகத்திற்குத் தப்பிச் சென்றார்.

1996 தாலிபான் ஆட்சி
கடந்த 1996-01 வரையிலான காலகட்டத்தில் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி இருந்தது. அந்த சமயத்தில் மோசமான அடக்குமுறை இருந்தது. குறிப்பாகப் பெண்களின் உரிமை மிக மோசமாக நசுக்கப்பட்டது. பள்ளி செல்வது, வேலைக்குச் செல்வது ஆகியவற்றுக்குக் கூட தாலிபான்களின் 1996-01 வரையிலான ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாட்டை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் இந்த முறை அப்படி கொடூர ஆட்சி முறையை கடைப்பிடிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஏழு பேர் பலி
இருந்தாலும் கூட தாலிபான்கள் மீது ஆப்கன் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல லட்சக் கணக்கான ஆப்கன் மக்கள் முயன்று வருகின்றனர். தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தைத் தினசரி ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் அங்கு திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்ததாகப் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவே காரணம்
ஆப்கனில் ஏற்கனவே அமைதியற்ற சூழலில் நிலவி வரும் நிலையில் இந்தச் சம்பவம் சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவே முழு காரணம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் அமீர் கான் முதாகி கூறுகையில், "பல்வேறு வசதிகளையும் அதிகாரங்களையும் கொண்டிருந்த போதிலும் அமெரிக்கா விமான நிலையத்தில் சட்ட ஒழுங்கை சீராக வைக்கத் தவறிவிட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அப்போது அமைதியான சூழலே நிலவுகிறது. ஆனால் காபூல் விமான நிலையத்தில் மட்டுமே குழப்பம் நிலவுகிறது. இதற்கு முழு காரணமும் அமெரிக்கா தான்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா ராணுவம்
ஆப்கன் நாட்டிலிருந்து வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனைத்து படைகளும் விலக்கிக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு 15,000 அமெரிக்கர்களும் 50 முதல் 60 ஆயிரம் நட்பு நாடுகளைச் சேர்ந்த மக்களும் உள்ளனர். அவர்களைப் பத்திரமாக வெளியேற்றும் பணிகளில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டின் பிற பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் கருத்து
காபூல் விமான நிலையம் அருகே தற்போது நிலவும் நிலை குறித்து சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், "நான் அங்கிருந்து வெளியேறியதே பெரும் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். விமான நிலையம் வந்த போது, நான் வந்த பேருந்தை மக்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களது பாஸ்போர்ட்டை காட்டி தங்களையும் கூட்டிச் செல்லும்படி கதறினர். விமான நிலையம் முன் இருக்கும் தாலிபான்கள் பாஸ்போர்டுகளை பரிசோதித்த பின்னரே வெளியேற அனுமதிக்கிறார்கள். விமான நிலையம் முன் கூடும் மக்களைக் களைக்க திடீர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடுகின்றனர். இதனால் அங்கு மிகப் பெரிய குழப்பமான ஒரு சூழல் நிலவுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications