இல்லாத கட்சியை பற்றி பேசாதீங்க.. நமக்கு நிறைய வேலை இருக்கு! பாஜகவை மறைமுகமாக சாடிய செந்தில் பாலாஜி!
கரூர் : இல்லாத கட்சியை பற்றி பேசுகிறார்கள், வீண் விளம்பரங்களை செய்து 66000 பூத் என்று பேசுகின்றனர். நமக்கு நிறைய வேலை இருக்கு என பாஜகவை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் முதல்வர் திட்டங்களை வழங்கி வருகிறார். பேராசிரியர் வழியில் ஆட்சி நடத்துகிறார். கொரனோ காலத்தில் வீடுகளில் பொதுமக்கள் முடங்கிக் கிடந்த போது அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் 1000 ரூபாய் தான் கொடுத்தார்கள்.

செந்தில் பாலாஜி
5000 ரூபாயாக உயர்த்தி தர ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அவர்கள் கொடுக்க மறுத்த 4000 ரூபாயை முதல்வரான உடனே கொடுத்துள்ளார். மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து, முதல்வரான பிறகு 2வது திட்டமாக அத்திட்டத்திற்கு கையெழுத்திட்டு அமல்படுத்தினார். தமிழகத்தில் சிறு மழை பெய்தாலும், சென்னை உட்பட எங்கும் தண்ணீர் தேங்காத நிலையை ஏற்படுத்தியவர் நம் முதல்வர். 1,50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஒன்றரை ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
கரூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும். 87 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக பெற திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு 3500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்.

இல்லாத கட்சி
இல்லாத கட்சியை பற்றி பேசுகிறார்கள், வீண் விளம்பரங்களை செய்து 66000 பூத் என்று பேசுகின்றனர். நமக்கு நிறைய வேலை இருக்கு, நாம் மக்கள் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். வார்டு வாரியாக கரூரில் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக வெங்கமேடு பகுதியில் திறக்கப்படும். மத்திய அரசு பொறுப்பேற்று 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை தற்போது 1200 ரூபாயாக ஆக்கிவிட்டது. மானியம் தருவதாக கூறினார்கள். தர மறுக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பொங்கலுக்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் வழங்கப்படும் என அறிவித்தார். யார் கோரிக்கை வைத்தாலும், அந்த கோரிக்கையை ஏற்று திட்டங்களை செயல்படுத்துகிறார் முதல்வர். அவரது திட்டங்களை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்று செயல்படுத்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications