போர்க்குற்றம்: இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி ஜெனீவாவில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர் போராட்டம்!!
ஜெனீவா: இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக் கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இறுதி யுத்தத்தில் சர்வதேச போர்விதிகளை மீறி ரசாயனக் குண்டுகளை பயன்படுத்தியது இலங்கை; வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்தவர்களை சுட்டுப் படுகொலை செய்தது; பெண்களை பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் அண்மையில் விசாரணை அறிக்கையை வெளியிட்டது.
இதில் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது உண்மை என்றும் இது குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
ஆனால் இந்த யோசனையை இலங்கை ஏற்க மறுத்துவருகிறது. இந்த நிலையில் தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 30-வது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக அமெரிக்க வரைவு தீர்மானம் ஒன்றை தயாரித்து உள்ளது. இதில் பெரும்பாலான அம்சங்கள் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதனிடையே இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜெனீவா நகரில் நேற்று பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியின் முடிவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்தபடியே முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அலுவலகப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications