ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க்கில் நாளை மறுநாள் பேரணி!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அமைத்த விசாரணைக் குழுவை அனுமதிக்க முடியாது என்பதில் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியாக உள்ளார். ஐ.நா. குழுவை அனுமதிக்காத ராஜபக்சேவை ஐ.நா. சபையில் பேச அழைக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழகத்தில் ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான டெசோ, மதிமுக ஆகியவை போராட்டம் நடத்தி உள்ளன. சென்னையில் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது. நாளை மறுநாள் 150-க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் பேரணி நடைபெற உள்ளது.
இதேபோல் நியூயார்க்கில் ஐ.நா. சபை முன்பாக 'பொங்கு தமிழ்" என்ற பெயரில் ராஜபக்சேவுக்கு எதிராக நாளை மறுநாள் பிரம்மாண்ட பேரணிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் பேரணியில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்தும் கனடாவில் இருந்தும் தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.