தமிழக மீனவர்களை இரக்கமே இல்லாமல் சங்கிலியில் கட்டி இழுத்து சென்ற இலங்கை போலீஸ்-மீனவர்கள் கொந்தளிப்பு
யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்களை இரக்கமே இல்லாமல் சங்கிலியில் கட்டி நீதிமன்றத்துக்கு இலங்கை போலீசார் இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள் இணைந்து மன்னார் வளைகுடாவில் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிப்பது ஆயிரமாண்டுகளாக பின்பற்றப்படுகிற நடைமுறை. அரசுகள் மாறிய போதும் இந்த மீன்பிடித் தொழில் சச்சரவு இல்லாமல் தொடர்ந்தது. நாடு விடுதலைக்குப் பின்னர் தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்தது.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதலே தமிழக மீனவர்கள் சொல்லொண்ணா துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 1980களில் இருந்து 2009 வரை இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இலங்கை ராணுவம் யுத்தம் நடத்தியது. இந்த காலத்தில் தமிழக மீனவர்களை காக்கை குருவி போல சுட்டுப் படுகொலை செய்தது இலங்கை ராணுவம். இலங்கை கடற்படையால் இதுவரை சுமார் 800 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக மீனவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர நாதி இல்லை என்கிற குமுறலும் இருந்து வருகிறது.
இலங்கை யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழக மீனவர்கள், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தாலே எல்லை தாண்டிவிட்டதாக குற்றம்சாட்டுவதை இலங்கை வாடிக்கையாக வைத்திருக்கிறது. அத்துடன் நடுக்கடலில் இலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துவிடுகிறது இலங்கை கடற்படை.
இது தொடர்பாக மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி வருகிறது. ஆனால் தமிழக மீனவர்களை கைது செய்வதும் சிறையில் அடைப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாக இருக்கிறது. அண்மையில் மயிலாடுதுறையை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள், பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேன் ஒன்றில் அழைத்துவரப்பட்டனர். அப்போது தமிழக மீனவர்கள் அனைவரையும் தொடர் சங்கிலியால் கட்டி நீதிமன்றத்துக்கு இழுத்து வந்தனர் இலங்கை சிறை அதிகாரிகள். குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் இலங்கை அரசு, தமிழக மீனவர்களை இப்படி கொடூரமாக நடத்துவது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications