18 ஆண்டுகளாக ட்ரம்ப் வரி கட்டாமல் ஏமாற்றியது இப்படித்தானாம்... பரபரக்கிறது அமெரிக்கா!!
வாஷிங்டன்: நஷ்டக் கணக்கைக் காட்டி அரசுக்கு கடந்த 18 ஆண்டுகளாக வரிகட்டாமல் ஏமாற்றி வந்திருக்கிறார் அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப். இந்தத் தொகை மட்டுமே ரூ 6,100 கோடி என்பது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஹிலரி கிளிண்டனும் சமீபத்தில் நேருக்கு நேர் விவாதித்தனர்.
அப்போது, "வருமான வரி கணக்கு விவரங்களை டிரம்ப் வெளியிடாமல் மறைக்கிறார்" என ஹிலரி குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், "நீங்கள் அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவி வகித்த காலகட்டத்தில் 33 ஆயிரம் இமெயில்களை அழித்ததை மீண்டும் எப்போது வெளியிடுகிறீர்களோ, அப்போது நானும் என் வருமான வரி கணக்கை வெளியிடுவேன்," என்றார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக டொனால்டு டிரம்ப் 1995-ம் ஆண்டு, தொழிலில் தனக்கு 916 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டதாக 1995-ம் ஆண்டு கணக்கு காட்டியுள்ளார்; இதன்மூலம் அவர் 18 ஆண்டுகள் வரி செலுத்தாமல், சட்டப்பூர்வமாக தப்பி வந்ததை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.
இது அவர் அடைந்த அசாதாரண பலம் என்றும், அட்லாண்டிக் நகரில் 3 சூதாடும் விடுதிகள், விமான நிறுவன தொழில், மேன்ஹட்டன் நகரில் பிளாசா ஓட்டலை வாங்கியது ஆகியவற்றின்மூலம் அவர் நிதி இழப்பை சந்தித்துள்ளார். அதைக் காட்டியே தொடர்ந்து வரி கட்டாமல் இருந்துள்ளார் என்றும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.
இதனை டிரம்பின் பிரசார குழுவினர் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. மாறாக, "நியூயார்க் டைம்ஸ் ஏடு சட்டத்துக்கு புறம்பாக வருமான வரி ஆவணங்களை பெற்று தகவல்கள் வெளியிட்டுள்ளது. இது ஹிலரி கிளிண்டன் பிரசார குழுவின் விரிவாக்கமாக உள்ளது" என குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த விவகாரம், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications