குட்டியை காப்பாற்ற முயற்சி.. அருவியில் இருந்து தவறி விழுந்த யானைகள்.. பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!
பேங்காக்: தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து பலியான யானைகளின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கிறது கோ யாய் தேசிய பூங்கா. அந்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமான இந்த பூங்காவில் யானை, கரடி, சிறுத்தை உள்பட ஏராளனமான விலங்குகள் இருக்கின்றன.
இந்த பூங்காவில் அமைந்திருக்கும் ஹூ நரோக் நீர் வீழ்ச்சி மிகவும் அபாயகரமானது. அதை குறிக்கும் வகையில் தான் அந்நீர் வீழ்ச்சிக்கு நரகத்தின் (ஹூ நரோக் )அருவி என பெயர் வைத்துள்ளனர்.
கடந்த வாரம் இந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து விழுந்து ஆறு யானைகள் பலியாகின. தண்ணீரில் சிக்கி இரண்டு யானைகள் உயிருக்கு போராடி வந்தன. அந்த யானைகளுக்கு உதவ தாய்லாந்து வனத்துறையினர் முயற்சித்தனர்.
இந்நிலையில் நீர் வீழ்ச்சியில் இருந்து விழுந்து பலியான யானைகளின் எண்ணிக்கை 11- ஆக உயர்ந்துள்ளது. ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்த போது மேலும் 5 யானைகளின் உடல்கள் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், யானைகள் ஆற்றைக் கடக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். "யானைக்கூட்டத்தில் இருந்த குட்டி யானை நீரில் அடித்துச் சென்று நீர் வீழ்ச்சியில் சிக்கியிருக்கக்கூடும். அந்த குட்டி யானையை காப்பாற்ற மற்ற யானைகள் முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்" என அவர்கள் கூறியுள்ளனர்.
ஹூ நரோக் நீர் வீழ்ச்சியில் இருந்து யானைகள் விழுந்து இறப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 1992ம் ஆண்டு இதேபோல 8 யானைகள் அந்த நீர் வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.