"இது" கூட கண்ணை உறுத்துதே.. வண்டி ஓட்டி வந்த ஆப்கன் பெண்கள்.. உற்று கவனித்த தாலிபன்கள்.. அடுத்த பகீர்
பெண்களுக்கான டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்துவிட்டனர் தாலிபான்கள்
காபூல்: இன்னொரு விஷயத்திலும் பெண்களுக்கு செக் வைத்துவிட்டனர் தாலிபான்கள்.. அடுத்தடுத்த விஷயங்களில் நெருக்கடி தந்து வரும் நிலையில், ஆப்கன் மக்கள் மிகப்பெரிய துயரத்தில் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்.
மீண்டும் ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள், அந்நாட்டு பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர்.
ஆனால், அதற்கான அறிகுறிகள் நீண்டகாலமாகவே தென்படாமலேயே இருந்தது.. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
ஆண் துணை
அதிலும், குறிப்பாக பெண்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். பெண்கள் டிவி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, பெண் பத்திரிகையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ளவேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூரம் வெளியில் செல்லக்கூடாது உள்ளிட்டக் கட்டுப்பாடுகளை ஆட்சிக்கு வந்த கையோடு தாலிபன்கள் விதித்திருந்தனர்.
தாலிபன்கள்
6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்கவும் தாலிபன்கள் தடை விதித்த நிலையில், படிப்பு விஷயத்தில் கூட இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற வேதனை மிஞ்சியது.. போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தாலிபன்கள் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் தந்திருந்தனர்..
டிரைவிங் லைசென்ஸ்
இப்போது மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.. காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி கொண்டு வந்துள்ளனர்.. இதை பார்த்த தாலிபன்கள், அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை என்று புது உத்தரவு ஒன்றை பிறப்பித்து விட்டார்களாம்.. சமீப காலமாகவே, பெண்கள் காபூல் உள்ளிட்ட நாட்டின் சில முக்கிய நகரங்களில் வாகனம் ஓட்டி வருகிறார்கள்.. ஆனால், இதை நேரில் பார்த்ததுமே, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்திவிட்டார்களாம்..
துப்பாக்கிகள்
இதை அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்களே தெரிவித்துள்ளன... பெண்கள் தனியாக பயணம் செய்யக்கூடாது, ஆண்கள் துணையின்றி அவர்கள் வெளியே வரவே கூடாது என்று இவர்கள் ஏற்கனவே அறிவித்தது மட்டுமின்றி, எந்நேரமும் தாலிபன்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.. இதெல்லாம் பார்த்து அந்நாட்டு பெண்கள் கதிகலங்கி போயுள்ளனர்.