சீனாவுடன் நட்பு.. இந்தியாவுடன் சண்டை.. திடீரென்று மோதும் அமெரிக்கா.. வர்த்தக போர் மூளும் அபாயம்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் பிப்ரவரி வருகைக்கு பின், இந்தியா - அமெரிக்கா இடையில் பெரும்பாலும் வர்த்தக போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பின் பிப்ரவரி வருகைக்கு பின், இந்தியா - அமெரிக்கா இடையில் பெரும்பாலும் வர்த்தக போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியா அமெரிக்கா இடையில் கடந்த சில மாதங்களாக வர்த்தக ரீதியான மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக இந்தியா மீது அமெரிக்கா வரிசையாக நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறது. இந்தியாவின் வர்த்தக கொள்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டித்து வருகிறார்.
இதேபோல் சீனாவின் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா வைத்து வந்தது. சீனா எங்களை ஏமாற்றுகிறது, அதிக வரி விதிக்கிறது என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார்.
இதை உடனே செய்யுங்கள்.. உங்களுக்கு நல்லது.. இல்லையென்றால்.. இந்தியாவை புதிதாக மிரட்டும் அமெரிக்கா!
என்ன சொன்னார்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் அதிகம் குற்றச்சாட்டு வைக்கும் இரண்டு நாடுகள் சீனாவும், இந்தியாவும்தான். உலகில் இருக்கும் மற்ற நாடுகள் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீதான வரியை குறைத்துவிடும். ஆனால் சீனா வரியை குறைக்க கொஞ்சம் கூட தயாராக இல்லை. இதை அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது.
சீனாவுடன் சண்டை
அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் 25% வரி விதிக்கப்படுகிறது. இதை டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கு எதிராக அவர் தொடர்ச்சியாக நிறைய நடவடிக்கைகளை எடுத்தார். இதனால் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.
என்ன ஆனது
இந்த நிலையில் நான்கு கட்டமாக இதற்கு எதிராக பேச்சுவார்த்தை நடந்தது. கடைசியாக ஜனவரி தொடக்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை இந்த வர்த்தக போரை முடிவிற்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அமெரிக்காவின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்க சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கைமாறாக சீனாவின் பொருட்கள் மீது அமெரிக்கா தனது வரியை குறைக்கும். இதன் மூலம் இரண்டு நாடுகளின் சண்டை முடிந்துள்ளது.
ஆனால் என்ன
ஆனால் இன்னும் அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக மோதல் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உலகில் சில முக்கிய நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள்( Generalized System of Preferences - GSP) என்று பட்டியலில் வைத்து இருக்கிறது. இதில் இந்தியாவும் இருந்தது. இந்த பட்டியலில் இருந்துதான் இந்தியாவை கடந்த வருடம் டிரம்ப் நீக்கினார். இந்தியாவின் வரி விதிப்பு முறையை கண்டித்து இப்படி செய்துள்ளார். இதனால் இந்தியாவிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
என்ன மோதல்
இதற்கு பதிலடியாக இந்தியா அமெரிக்கா இறக்குமதி பொருட்கள் மீது வரியை உயர்த்தியது. இது அமெரிக்காவை பெரிய அளவில் பாதித்தது. இந்த நிலையில், இந்தியா, அமெரிக்காவின் பொருட்களை அதிகமாக வாங்க வேண்டும். சீனாவை போல இந்தியாவும் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது. இந்தியா தனது வரி விதிப்பு முறையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்க கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளது.
டிரம்ப் வருகிறார்
இதை பற்றி பேசத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகிறார். இந்தியாவுடன் சீனாவை போலவே ஒப்பந்தம் செய்ய அவர் வருகிறார். ஆனால் இந்தியா, இந்த ஒப்பந்தத்தை ஏற்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே மோசமாக இருப்பதால், கூடுதலாக அமெரிக்காவிற்கான வரியை குறைக்க முடியாது. அது மேலும் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று இந்தியா கருதுகிறது.
வாய்ப்பில்லை
இந்தியா அமெரிக்காவிற்கான வரியை குறைக்க வாய்ப்பில்லை. இதனால் இந்தியாவின் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரியை விதிக்கும். அது சண்டையாக மாறும். அது இன்னும் நிறைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் இரண்டு நாடுகளும் வர்த்தக போரில் ஈடுபடும் சூழல் ஏற்படலாம். காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்காவின் மத்தியச கோரிக்கையை இந்தியா ஏற்காததும் இதற்கு வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.