இதைப் போய் எப்படி "நாய்" என்று சொல்ல முடியும்...?
மாஸ்கோ: ரஷ்யாவில் தனக்கு காயம் ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த நர்ஸ் ஒருவரைத் தேடி கிட்டத்தட்ட 200 மைல் தூரம் அலைந்து திரிந்து ஓடி வந்து கடைசியில் அவரைக் கண்டுபிடித்து சேர்ந்துள்ளது ஒரு நன்றியுடைய நாய்.
சாலை விபத்தில் காயமடைந்த நாய் இது. அதை இந்த நர்ஸ் காப்பாற்றி மருந்து போட்டு கட்டு போட்டு விட்டு காப்பாற்றினார். அவருடைய செயலை மறக்காத இந்த நாய், அந்த நர்ஸைத் தேடி கிட்டத்தட்ட 200 மைல் தூரம் ஓடி வந்து அவரிடம் சேர்ந்துள்ளது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
அந்த நாயின் பெயர் ஷவி. தெற்கு ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஓபிளாஸ்ட் என்ற நகரில் இந்த நாய் கடந்த குளிர்காலத்தின்போது காயமடைந்தது. சாலையில் சென்ற ஒரு வாகனம் இந்த நாய் மீது மோதி விட்டு நிற்காமல் போய் விட்டது.
இதையடுத்து அந்த நாய் தவித்து வந்தது. அதில் அந்த நாயின் இரு கால்களும் ஒடிந்து போய் விட்டது. மேலும் கடும் குளிரிலும் அது நடுங்கியது. இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அதன் நிலையைப் பார்த்து பரிதவித்து கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் ஆன்லைனிலும் இந்த நாய்க்கு உதவுமாறு கோரிக்கை விடப்பட்டது.
இதைப் பார்த்த 26 வயதான நினா பரனோவ்ஸ்கியா என்ற நர்ஸ் உடனடியாக அந்த நாய் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையைத் தொடர்பு கொண்டார். பின்னர் தான் வசித்து வந்த ரோஸ்டோவ் ஆன் டான் என்ற நகருக்கு நாயைத் தூக்கிக் கொண்டு சென்றார். அங்கு வைத்து அந்த நாய்க்கு சிகிச்சை அளித்தார். கால்களில் அறுவைச் சிகிச்சை செய்ய்பட்டது. தனது மகளுடனுடம், பிற செல்ல விலங்குகளுடனும் சேர்ந்து இந்த நாய்க்கும் பாசம் காட்டினார் நினா.
அந்த நாய்க்கு நடக்கக் கற்றுக் கொடுத்தார். அதற்கு சின்னச் சின்ன வேலைகளைக் கொடுத்து அதை மீண்டும் பழக்கப்படுத்தினார். அதனுடன் தினசரி விளையாடினார்.
ஆனால் நினாவின் வீடு மிகச் சிறியது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்குமே வீட்டில் இடம் போதாத நிலை. இதனால் அந்த நாயை, கிட்டத்தட்ட 200 மைல் தொலைவில் புதிய விலங்குகள் காப்பகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு தனது ஊருக்குத் திரும்பி விட்டார்.
ஆனால் அந்த நாய் சில நாட்களில் அங்கிருந்து வெளியேறி விட்டது. இதுகுறித்து காப்பகத்தினர் நினாவுக்குத் தகவல் கொடுத்தனர். இதனால் நினா கவலை அடைந்தார். 2 வாரமாகியும் நாய் எங்கு போனது என்று தெரியவில்லை. நினாவுக்கு ரொம்பக் கவலையாகி விட்டது.
கடந்த வாரம் நினா சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அவரது காலை யாரோ பிராண்டுவது போல இருந்தது. சட்டென்று குனிந்து பார்த்த நினா அதிர்ச்சி அடைந்து விட்டார். காரணம் அது நாய் ஷவி.
நினாவை விட்டுப் பிரிந்து இருக்க முடியாத ஷவி, தான் சேர்க்கப்பட்ட காப்பகத்திலிருந்து நடந்தே நினாவைத் தேடி வந்து விட்டது. ஷவியின் செயலால் நெகிழ்ந்து போன நினா கண்ணீர் விட்டு அழுது விட்டார். நாயும் கண்ணீர் விட்டது.
தற்போது நினா பெரிய வீடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம். இனி எக்காலத்திலும் ஷவியைப் பிரிவதில்லை என்றும் உறுதியோடு இருக்கிறாராம்.