அதிக நேரம் அமர்ந்திருந்தால் ‘பைல்ஸ்’ மட்டுமல்ல... ஹார்ட் அட்டாக்கும் வரலாமாம்!
ஒட்டாவா: அதிக நேரம் அமர்ந்திருந்தால் மூல நோய் மட்டுமல்லாமல், நீரிழிவு, இருதய நோய் தாக்கும் அபாயமும் அதிகம் இருப்பதாக கனடா நாட்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
கனடா நாட்டு மருத்துவ ஆய்வுக் கழகம் சமீபத்தில் மருத்துவ ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் மூலம் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய் அதிகம் தாக்கும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் ஆல்டர் கூறியதாவது :-
எப்பப் பார்த்தாலும் டிவி தான்...
சராசரியாக ஒரு மனிதனின் பாதிக்கும் மேற்பட்ட பகல் நேரம் டிவி முன்போ, கம்ப்யூட்டர் முன்போ உட்கார்ந்தவாறே கழிகிறது.
தினசரி உடற்பயிற்சி செய்தால் கூட தப்ப முடியாது
அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்தாலும் கூட இருதய நோய், நீரிழிவு, புற்று நோய் தாக்கும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
ஓவரா உடற்பயிற்சி செஞ்சா ஓரளவு தப்பிக்கலாம்...
உடற்பயிற்சி செய்யாதவர்களையும், மிதமான உடற்பயிற்சி செய்பவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகிறது. அதிக அளவில் உடற்பயிற்சி செய்பவர்களை இந்த நோய்கள் குறைவாகவே தாக்குகின்றன.
இனிமே தான் கண்டுபிடிக்கணும்...
எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களை இந்த நோய்கள் தாக்காது என்பதை அறிய மேற்கொண்டு ஆய்வுகள் நடத்த வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரொம்ப நேரம் உட்காராதீங்க...
மேலும், அவர் முன்னெச்சரிக்கையாக நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது என மக்களுக்கு அறிவுரையும் தந்துள்ளார்.