மெக்சிகோ பார்டரில் சுவர் கட்டியே தீருவேன்… ட்ரம்பின் கனவுக்கு அமெரிக்க மக்கள் பலிகடா?
வாஷிங்டன்(யு.எஸ்) : அமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் கட்டியே தீருவேன் என்ற தேர்தல் சூளுரையை நிறைவேற்றுவதற்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த செலவை மெக்சிகோ அரசு தரவேண்டும் என்றும் மீண்டும் கூறியிருந்தார்.
ட்ரம்பின் இந்த கோரிக்கையை முதலில் இருந்தே மெக்சிகோ அதிபர் என்ரிக்கே பென நேட்டோ மறுத்து வந்தார். தேவைப் பட்டால் ட்ரம்ப் கட்டிக்கொள்ளட்டும். மெக்சிகோ ஒரு டாலர் கூட தராது என்பது அவரது நிலைப்பாடாகும்.
ட்ரம்ப் மீண்டும்,மெக்சிகோ பணம் தரவேண்டும் இல்லையென்றால் மெக்சிகோ அதிபர் தன்னை சந்திக்க வரவேண்டியதில்லை என்று கூறிவிட்டார். அடுத்த வாரம் ட்ரம்பை சந்திக்க இருந்த நேட்டோ, பயணத்தை ரத்து செய்து, ட்ரம்ப் போல் ட்விட்டரில் தட்டி விட்டார்.
எங்கே போகும் இந்த பாதை?
மெக்சிகோ பணம் தரவில்லை என்றால், அங்கிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 20 சதவீத வரி விதிக்கலாம் என்று யோசனையை ட்ரம்ப் கூறியுள்ளார்.
மெக்சிகோவிலிருந்து கடந்த ஆண்டும் 303 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது 20 சதவீதம் வரி என்றால் 60 பில்லியன் கிடைக்கும். சுவர் கட்டுவதற்கு தேவையான பணத்திற்கு மேலாகவே அது இருக்கும்.
ஆனால் இறக்குமறி வரி என்பது அமெரிக்க மக்கள் தலையில் தான் விடியும் என்பது சாமானியரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும்.கார்கள் முதல் டக்கீலா வரை அனைத்தும் விலை உயரும்.
அதாவது மெக்சிகோ பணம் கொடுக்கவில்லை என்றால் அமெரிக்கர்கள் பாக்கெட்டில் கையை வை என்பதுதான் இந்த 20 சதவீத வரித் திட்டமாகும்.
ட்ரம்பின் குடியரசுக்கட்சியினரே இந்த வரி விதிப்பை எதிர்த்துள்ளனர். ஜான் மெக்கய்ன் உட்பட செனட்டர்களும், அவை உறுப்பினர்களும் எதிர்ப்புக் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சந்திக்கத் தயார்.. மெக்சிகோ அறைகூவல்
அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கத் தயார் என்று மெக்சிகோவின் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 6 மில்லியன் வேலைகள் மெக்சிகோ இறக்குமதி சார்ந்து உள்ளது என்றும், அந்த வேலைகளுக்கு பாதிப்பு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மெக்சிகோவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் ஃபோர்டு, ஜி.ஈ மோட்டார்ஸ், வால்மார்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்குத் தான் இழப்பு என்றும் கூறப்படுகிறது.
உட்கட்சி எதிர்ப்பை அடுத்து, மக்களுக்கு பாதிப்பு வராத வேறு வருவாய் ஆதாரத் திட்டங்களையும் பரிசீலிப்போம் என்று வெள்ளை மாளிகைத் தரப்பினர் கூறியுள்ளனர்.
நாஃப்தா என்றழைக்கப்படும் கனடா-அமெரிக்கா- மெக்சிகோ பொருளாதார உடன்பாட்டின் படி கனடாவிலும், மெக்சிகோவிலும் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவுக்குள் இறக்குமதி ஆகின்றன.
ட்ரம்பின் கெடுபிடி நாஃப்தா உடன்பாட்டிற்க்கும் உலை வைக்கும். மேலும் ட்ரம்பின் முடிவு நடைமுறைக்கு வந்தால் அது அமெரிக்கா- மெக்சிகோ\பொருளாதார யுத்தம் என்றே கருதப்படுகிறது.
ஒரு சுவர் கட்டுறதுக்கு இவ்வளவு அக்கப்போரா? ட்ரம்ப் ஆட்சி எந்த திசையில் செல்லும் என்று சொல்ல முடியாத ஒரு வித திகில் நிலவுவதை மறுப்பதற்கில்லை.
-இர தினகர்