ரஷ்யாவில் துருக்கி அதிபர் எர்டோகன்... புதினுடன் இன்று பேச்சுவார்த்தை!!
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யா சென்றுள்ள துருக்கி அதிபர் எர்டோகன் அந்நாட்டு அதிபர் புதினை இன்று சந்தித்து பேசுகிறார். இப்பேச்சுகளின் போது ரஷ்யாவுடனான உறவை மறுசீரமைக்க விரும்புவதாகவும் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
சிரியா விவகாரத்தில் துருக்கி, அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகளுக்கு துருக்கி முக்கியமான நட்பு சக்தியாக இருந்து வருகிறது.
இதனிடையே சிரியாவில் ரஷ்யாவும் களமிறங்கியது. ஐஎஸ் தீவிரவாதிகளை மட்டுமின்றி அமெரிக்கா ஆதரவு ஆயுத குழுக்களையும் ரஷ்யா தாக்கியது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ரஷ்யா மோதல் போக்கை கடைபிடித்தது.
இதன் ஒரு கட்டமாக துருக்கி வான்பரப்புக்குள் நுழைந்ததாக ரஷ்யாவின் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து துருக்கி- ரஷ்யா இடையேயான உறவு சீர்குலைந்து போனது. அண்மையில் துருக்கில் எர்டோகன் அரசுக்கு எதிராக ராணுவ கிளர்ச்சி வெடித்தது.
ஆனால் பொதுமக்களின் ஆதரவுடன் ராணுவ கிளர்ச்சியை முறியடித்தார் எர்டோகன். அத்துடன் கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதற்கு மேற்குல நாடுகள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எர்டோகன் பயணம் மேற்கொண்டுள்ளார். துருக்கி ராணுவ கிளர்ச்சிக்குப் பின்னர் எர்டோகன் மேற்கொண்டிருக்கும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது.
ரஷ்யா அதிபர் புதினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் எர்டோகன் சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின் போது சீர்குலைந்து போன ரஷ்யாவுடனான உறவுகளை மறுசீரமைக்க விரும்புவதாக எர்டோகன் கூறியுள்ளார்.