'டாப்' போட்டது ஒரு குத்தமா?.. துணியால் வந்த வம்பு.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண்கள்
அமெரிக்கா: அசாதாரண சூழ்நிலைகளின்போது விமானத்தில் இருந்து பயணிகளை இறக்கி விடப்படுவது வழக்கம். ஆனால், கிராப் டாப்ஸ் போட்டதற்காக விமானத்தில் இருந்து இரண்டு இளம்பெண்கள் இறக்கி விடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
விமானத்தில் ஏற்படும் வசதி குறைபாடுகள் குறித்த செய்திகள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, விமானத்தில் கோளாறு என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கிராப் டாப்ஸ் அணிந்ததற்காக இரண்டு பெண்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் நோக்கி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் அக்டோபர் 4 ஆம் தேதி புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானத்தில் தாரா கெஹிடி மற்றும் தெரேசா அரௌஜோ என்ற இரண்டு பெண்கள் பயணம் செய்துள்ளனர். குளிரான காலநிலை நிலவியதால் தோழிகள் இருவரும் குளிர்கால ஆடையான ஸ்வெட்டர் அணிந்திருந்துள்ளனர்.
விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது குளிர் இல்லாததால் ஸ்வெட்டரை கழற்றியுள்ளனர். அப்போது, அந்த பெண்கள் இருவரும் கிராப் டாப் அணிந்திருந்துள்ளனர். இதைப் பார்த்த விமான ஆண் ஊழியர் ஒருவர் வேறு எதாவது ஆடையை அவர்களின் அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். விமானத்தில் கிராப் டாப் ஆடைகளை அணியக் கூடாது என்ற விதிமுறை இல்லாததால் ஏன் இந்த ஊழியர் இப்படி கூறுகிறார் என்று தெரியாமல் அவர்கள் குழம்பியுள்ளனர்.
இந்நிலையில், சற்று நேரம் கழித்து கிராப் டாப் அணிந்திருந்ததற்காக விமானத்தில் இருந்து அந்த இரண்டு இளம்பெண்களும் கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, தெரசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஸ்பிரிட் ஏர்லைன்ஸில் பயணம் செய்தபோது நாங்கள் அணிந்திருந்த கிராப் டாப்பை பார்த்த ஊழியர் வேறு ஆடையை மேலே அணியுமாறு கூறினார்.
ஆனால், விமானத்தில் எங்களுடன் பயணிந்த எந்தவொரு பயணியும் எங்களுடைய ஆடைகள் குறித்து எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த ஆண் ஊழியர் எந்தவொரு காரணமும் இல்லாமல் எங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட முயன்றார். எங்களுடன் பயணித்த சக பயணிகள் பாதுகாக்க முயற்சி செய்தனர்.
ஆனால், விமான கண்காணிப்பாளர் எங்களிடம் விமானத்தில் இருந்து நீங்கள் இறங்குகிறீர்களா. இல்லையெனில் போலீஸை அழைக்க வேண்டியிருக்கும் என்று கூறி மிரட்டினார். மேலும், எங்களுக்கு வேறு விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்து தரப்படும் என்றார். ஆனால், விமானத்தில் இருந்து கீழே இறங்கிய பின்னர் விமானம் இல்லை என்று கூறிவிட்டார்.
எங்கள் பயணத்துக்கான கட்டணத் தொகையையும் அவர்கள் திருப்பித் தரவில்லை. இதையடுத்து, மீண்டும் ஆயிரம் டாலர் செலவு செய்து நாங்கள் மற்றொரு விமானத்தில் பயணித்தோம். விமான பணியாளருக்கு நாங்கள் அணிந்திருந்த ஆடை பிடிக்கவில்லை என்பதால் எங்களை கீழே இறக்கிவிட்டு விட்டனர். அதோடு மட்டுமல்லாமல் எங்களை குற்றவாளிகள் போல அவர்கள் நடத்தியது போல எங்களுக்குத் தோன்றியது. இச்சம்பத்தின்போது சக பயணிகள் அனைவரும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெரசாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி உள்ளது. இந்நிலையில், ஸ்பிரிட் ஏர்லைன் விமான நிறுவனத்தின் சார்பில், பயணிகளின் ஆடைகள் ஆபாசமாக இருந்தால் அவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இச்சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரசா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications