54 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா– கியூபா நாடுகளில் தூதரகங்கள் திறப்பு!
வாஷிங்டன்: 54 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய நாடுகளிடையே தூதரக உறவு மலர்ந்துள்ளது. இருநாடுகளிலும் தூதரகங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
அமெரிக்கா-கியூபா இடையிலான தூதரக உறவு கடந்த 1961-ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு இரு நாடுகளும் பகையுடன் செயல்பட்டு வந்தன.
அண்மையில் இரு நாடுகளிடையே சுமூக உறவு மலர்ந்தது. இந்த நிலையில் 54 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவு நேற்று புதுப்பிக்கப்பட்டது.
வாஷிங்டனில் கியூபா தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், கியூபா தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையகத்திலும் கியூபா கொடி ஏற்றப்பட்டது.
அதுபோல் கியூபா தலைநகர் ஹவானாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டு, அங்கு அமெரிக்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்த உறவை கொண்டாட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஓரிரு மாதங்களில் கியூபாவுக்கு செல்ல உள்ளார்.