எம்.ஹெச். 370 மலேசிய விமானத்தை அமெரிக்கா தான் சுட்டது: மாஜி. விமான நிறுவன தலைவர்
பாரிஸ்: கடந்த மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370ஐ ஹேக்கர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டதாக நினைத்து அஞ்சிய அமெரிக்க ராணுவம் தான் அதை சுட்டு வீழ்த்தியது என்று முன்னாள் விமான நிறுவன தலைவர் மார்க் டுகைன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெயங்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளபோதிலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் மூடப்பட்ட பிரான்ஸ் விமான நிறுவனமான ப்ரோட்டியஸ் ஏர்லைன்ஸின் முன்னாள் சி.இ.ஓ. மார்க் டுகைன் எம்.ஹெச். 370 பற்றி புதிய தகவலை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
அமெரிக்கா
மலேசிய விமானம் மத்திய இந்திய பெருங்கடலில் உள்ள தீவான டீகோ கார்சியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை அமெரிக்க ராணுவம் தான் சுட்டது.
ஹேக்கிங் பீதி
மலேசிய விமானத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளதாக அமெரிக்கா கருதியது. எங்கே ஹேக்கர்கள் விமானத்தை 9/11 பாணியில் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவார்களோ என்ற பீதியில் அமெரிக்கா மலேசிய விமானத்தை தாக்கியது.
மாலத்தீவு
டீகோ கார்சியா அருகே உள்ள மாலத்தீவில் வசிப்பவர்கள் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் நிறம் கொண்ட பெரிய விமானத்தை மார்ச் 8ம் தேதி பார்த்ததாக சிறிய தீவில் உள்ள மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
பாரா தீவு
வடக்கு மாலத்தீவில் உள்ள பாரா தீவு அருகே காலியான ஃபயர் எக்ஸ்டிங்குஷர் அதாவது தீயை அணைக்க விமானத்தில் வைத்திருந்த கருவி கிடந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
மாயமான மலேசிய விமானம் பற்றி விசாரணை நடத்தக் கூடாது என உளவுத் துறையிடம் இருந்து எனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றார் மார்க். மார்க் தற்போது நாவல் ஆசிரியராக உள்ளார்.