ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் சப்ளை- 'யு.எஸ்.'வார்னிங்'! ஏடன் வளைகுடாவில் பதற்றம்!!
சானா: ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் ஈரான் அனுப்பி வைத்திருக்கும் ஆயுதக் கப்பல்களை வழிமறிக்கும் வகையில் 9 போர்க் கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏமனில் அதிபர் ஹதி ஆதரவு படைகளை எதிர்த்து ஈரானின் ஆதரவோடு ஷியாப் பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு அந்நாட்டில் முன்னேறி வருகின்றனர். பல நகரங்களை அவர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
ஏமன் அரசுக்கு ஆதரவாக சன்னி பிரிவு மக்கள் அதிகம் நிறைந்த செளதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகளின் படைகள் போர் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் 26-ஆம் தேதியில் நடந்து வரும் கடுமையான போரில் இதுவரை சுமார் 700 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 3000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நாட்டின் பெரும்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர்.
அங்கு வான் தாக்குதலை நிறுத்துவதாக செளதி அரேபியா இன்று அறிவித்துள்ளது,. இதனிடையே ஏமனில் நிலைமையை மோசமாக்கி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அண்மையில் ஹவுத்தி படையினருக்கு ஆயுதம் வழங்குவதற்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
அமெரிக்கா இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஈரானை எதிர்த்து வந்த நிலையில் அமெரிக்காவின் 9 போர்க் கப்பல்கள் ஏமன் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அந்நாடு அறிவித்துள்ளது. இதில் ரூஸ்வெல்ட் என்ற பிரம்மாண்ட போர்க்கப்பலும் அடங்கும். 60 போர்க் கப்பல்களுடன் மொத்தம் 5 ஆயிரம் வீரர்களை தாங்கிச் செல்லக் கூடியது ரூஸ்வெல்ட் போர்க்கப்பல்.
சவுதி அரேபிய படைகள் நடத்திய போருக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு நேரடி உதவியை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை. தற்போது தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ஈரான் அரசு ஹவுத்தி படைகளுக்கு வழங்கி வருவதை கண்காணிக்கும் விதமாக நவீன போர் கப்பல்களை ஏமனுக்கு அனுப்பியுள்ளது.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் ஈரானுடன் நேரடியாக அமெரிக்கா மோதுகிறது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புதுறை அதிகார் கர்னல் ஸ்டீவ் வாரன் கூறும்போது, "ஏமன் கடலை நோக்கி தியோடர் ரூஸ்வெல்ட் புறப்பட்டது. ஏடன் துறைமுகத்துக்கு நுழையும் ஈரான் கப்பல்களை இந்த கப்பல் கண்காணித்து தடுத்து நிறுத்தும்" என்றார். இதனால் ஏடன் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான நிலைமை உருவாகி உள்ளது.