"அத்தனையும் கொடூரம்!" கூண்டில் ஏற்றப்பட்ட முதல் போர் குற்றவாளி! உக்ரைன் மக்களை கொன்று குவித்த ரஷ்யா
கீவ்: உக்ரைன் போர் இன்னும் கூட தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யா இதில் கணக்கிட முடியாத போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக உக்ரைன் சாடி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. அங்கு சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வந்த போதிலும், ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த போர் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விளாடிமிர் புடினை கவிழ்க்க சதி! நாங்க இல்லை ரஷ்ய அதிகாரிகளே பண்றாங்க! பரபரப்பை கிளப்பும் உக்ரைன்..!
உக்ரைன் போர்
உக்ரைன் போர் தொடங்கிய உடனேயே மறுபுறம் அமைதி பேச்சுவார்த்தையும் தொடங்கி நடைபெற்றது. முதலில் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன், துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர், சில காலம் சண்டை நடைபெறாமல் இருந்த போதிலும், மீண்டும் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டது.
போர் குற்றம்
இந்த உக்ரைன் போரில் ரஷ்யா பல போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. பெண்கள் சிறுமிகளை பலாத்காரம் செய்தது என்று கூறிக் கொண்டே போகலாம். இதனிடையே உக்ரைன் போர்க் குற்றம் தொடர்பான முதல் வழக்கு விசாரணை இப்போது தொடங்கி உள்ளது. 21 வயதான ரஷ்ய டேங்க் கமாண்டர் வாடிம் ஷிஷிமரின் மீதான விசாரணை கீவ் நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது.
ரஷ்ய வீரர்
நிராயுதபாணியாக இருந்து உக்ரைன் மக்களைத் தாக்கியதாக நடத்தியதாக வாடிம் ஷிஷிமரின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த பிப். 28ஆம் தேதி வடகிழக்கு உக்ரேனிய கிராமம் ஒன்றில் 62 வயதான முதியவரைக் கொலை செய்ததாக வாடிம் ஷிஷிமரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்.
போர்க்குற்றங்கள்
உக்ரைன் போரில் அப்பாவி மக்களைக் குறி வைத்து ரஷ்யா மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. இந்தப் போரில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. உலக அரங்கில் ரஷ்யாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்றே உக்ரைன் இப்படிப் பொய் பிரசாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா விளக்கம்
ரஷ்ய வீரர் மீதான வழக்கு விசாரணை குறித்து ரஷ்யச் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "இந்த விசாரணை குறித்து எங்களிடம் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவும் இல்லை என்பதால் அவருக்கு எங்களால் உதவக் கூட முடியவில்லை. எங்கள் மீது உக்ரைன் திட்டமிட்டுப் போர் குற்றச்சாட்டுகள் சுமத்துகிறது. இது பொய்யான குற்றச்சாட்டு என்று அனைவருக்கும் தெரியும்.
குற்றச்சாட்டு என்ன
வாடிம் ஷிஷிமரினை கொண்ட ரஷ்ய ராணுவ குழு உக்ரைன் படையினரின் தாக்குதலில் சிக்கி உள்ளது. இதனால், அவர்கள் தங்கள் வாகனங்களைக் கைவிட்டுவிட்டு, அங்கிருந்த உக்ரைன் நபரின் வாகனத்தைத் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு கிராமத்தில் நுழைந்துள்ளனர். அங்கிருந்த 62 வயது முதியவர் இவர்களைப் பார்த்துள்ளார். அவர் ரஷ்யப் படையின் இருப்பு குறித்துக் கூறக் கூடாது என்பதற்காக அவரை கொன்றதாக வாடிம் ஷிஷிமரின் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.