ஜூன் 21 சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு – மோடி மகிழ்ச்சி
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையில் பேசியபோது, யோகாவுக்காக ஒருநாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி, யோகாவுக்கான சர்வதேச தினம் குறித்த தீர்மானத்தை ஐ.நா. சபையில் வியாழக்கிழமை கொண்டு வந்தார். இந்ததீர்மானத்துக்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. எந்த ஐ.நா. தீர்மானத்துக்கும் இவ்வளவு அதிக நாடுகள் ஆதரவு தெரிவித்தது இல்லை. இதனால், அந்த தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேறியது. அதையடுத்து, ஜூன் 21ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது.
இதுகுறித்து பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன், "நோய்கள் வராமல் தடுப்பதிலும், மனஅழுத்தம் வராமல் தடுப்பதிலும், மனத்துக்கு அமைதியைத் தருவதிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
மோடி வரவேற்பு
சர்வதேச யோகா தினத்தை ஐ.நா. அறிவித்ததற்கு, பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நா.வின் அறிவிப்பால் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஐ.நா.வில் இந்தியாவின் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.