'ஆப்கன் உள்நாட்டு போர்.. பேரழிவு ஏற்பட்டுள்ளது.. கடும் பஞ்சத்தில் 1.4 கோடி மக்கள்..' ஷாக் தரும் ஐநா
காபூல்: ஆப்கானைத் தாலிபான்கள் இப்போது கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள 1.4 கோடி மக்கள் கடுமையான பசி/ பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஆப்கனிலுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கப் படைகள் ஆப்கனில் களமிறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அங்கிருந்த தாலிபான் ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு அமெரிக்கப் படைகள் அங்கு இருந்தன. இந்தக் காலகட்டத்தில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருந்தது.

அமெரிக்கா அறிவிப்பு
இந்தச்சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்கனிலுள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தார். ஆப்கனை மீண்டும் கட்டமைப்பது தங்கள் வேலை இல்லை என்று தெரிவித்த அதிபர் பைடன், மீண்டும் அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்த முடியாத வகையில் பயங்கரவாதிகளைப் பலவீனப்படுத்துவதே தங்கள் நோக்கம் என்றும் அது நிறைவேறிவிட்டதால் ஆப்கனில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார்,

தாலிபான்கள்
இதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்த தாலிபான்கள் உடனடியாக ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். முதலில் எல்லைப் பகுதிகளையும் கிராமப்புறங்களையும் கைப்பற்றிய தாலிபான்கள் அடுத்து நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திய தாலிபான்கள் தலைநகர் காபூலை கடந்த வாரம் கைப்பற்றினர். பல பகுதிகளில் தாலிபான்களுக்கு ஆப்கன் படைகள் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டவில்லை, மேலும், அந்நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகம் தப்பிச் சென்றனர்,

பஞ்சம்
ஆப்கானைத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும், அங்கு இன்னும் அமைதி முழுமையாகத் திரும்பவில்லை. பல்வேறு இடங்களிலும் அமைதியற்ற சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், சுமார் 3.8 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஆப்கனில் 1.4 கோடி பேர் கடுமையான பசி / பஞ்சத்தில் இருப்பதாக ஐநாவின் உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

பேரழிவு நிச்சயம்
இது குறித்து உலக உணவுத் திட்ட அமைப்பின் இயக்குநர் மேரி எலன் மெக்ரோடி கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் காரணமாக மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாகக் கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் ஆப்கனில் ஏற்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார பாதிப்பும் சேர்ந்து கொண்டதால் ஆப்கனில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்
இந்த கடுமையான வறட்சியால் 40% க்கும் அதிகமான பயிர்களும் கால்நடைகளும் அழிந்துவிட்டது. தாலிபான்களின் நடவடிக்கையால் பல்லாயிரணக்காணக்கான மக்கள் புதிய இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். குளிர்காலமும் நெருங்கி வருவதால் மிக மோசமான பஞ்சம் நாட்டில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

போரை நிறுத்த வேண்டும்
மே மாதம் வரை 40 லட்சம் பேருக்குத் தேவையான உணவுப் பொருட்களை அளித்துள்ளோம். இதை வரும் காலத்தில் 90 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதேநேரத்தில் இதில் எண்ணற்ற சவால்கள் உள்ளதையும் நாங்கள் அறிவோம். இப்போது நாட்டில் அமைதி திரும்பவில்லை என்றால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, உள்நாட்டுப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். மேலும், 200 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவு தானியங்களும் உடனடியாக தேவை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications