எரிபொருட்களை இனி நம்பக்கூடாது.. உடனே நிறுத்திக்கோங்க.. மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் ஐநா
ஜெனிவா: பிரிட்டன் புதைபடிம எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், உலக நாடுகள் புதைபடிம எரிப்பொருளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.
உலகம் ஏற்கெனவே வெப்பமயமாகி வரும் நிலையில் தற்போது இதனை நிறுத்தாவிடில் இந்த வெப்பமயமாதல் மேலும் அதிகரிக்கும் எனவும் ஐநா எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தில் புதைபடிம எரிபொருளை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நீடித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் விடுத்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல்களை கொண்டு மின்சாரம் தயாரிப்பதை நோக்கி உலகமே நகர்ந்துகொண்டிருக்கையில் இங்கிலாந்தில், புதைபடிமங்களிலிருந்து எரிபொருள் எடுப்பதற்கு அரசு முயற்சித்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதாவது, பூமிக்கு அடியிலிருந்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகியவற்றை எடுப்பதற்கு 'ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்' எனும் அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதல்
ஏற்கெனவே புவி வெப்பமடைவதை குறைக்க இங்கிலாந்து முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில் பூமிக்கடியிலிருந்து எரிபொருள் எடுப்பதை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும் என போராட்டக்காரர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 43% மின்சாரத்திற்கான எரிபொருள் ரஷ்யாவிடமிருந்துதான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

புதைபடிம எரிபொருள்
இப்படியான நிலையில் திடீரென பொருளாதார தடையெனில் வரும் குளிர் காலத்தில் கடும் மின்வெட்டை இங்கிலாந்து சந்திக்க நேரிடும் என்று அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதன் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. மக்கள் விலை உயர்வை எதிர்த்து ஒரு பக்கமும், புதைபடிமங்களிலிருந்து எரிபொருளை பிரித்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுபுறமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எரிபொருள் பெற இது ஒன்றுதான் வழியென இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

முதலீடு
போராட்டக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த வான் கோ-வின் 'சூரிய காந்தி' ஓவியத்தின் மீது தக்காளி சாஸை கொட்டி போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதாவது, "புதைபடிம எரிபொருட்களை நம்பியிருப்பதை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். புதைபடிமங்களிலிருந்து எரிபொருளை எடுக்கும் விதத்தில் இனி எந்த கட்டமைப்பும் மேற்கொள்ளக்கூடாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் முதலீடு செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.

முயற்சி
மேலும், "இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் வெப்பம் 2.8 டிகிரி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மோசமான விளைவுகளை, பேரழிவுகளை ஏற்படுத்தும். உலக நாடுகள் அனைத்தும் 2030ம் ஆண்டுக்குள் புதைப்படிம எரிபொருள் மூலம் வெளியேற்றப்படும் கரியமில வாயு உமிழ்வை நிறுத்த வேண்டும் என ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உறுதியேற்பின்படி உலக நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் போதுமானதாக இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications