செவ்வாய் கிரகம் குறித்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட நாசா- இஸ்ரோ முடிவு!
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஆகியவை, வருங்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்து கூட்டாக ஆய்வுகளை நடத்த தீர்மானித்துள்ளன.
அது தொடர்பான பணிகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்றும் முடிவு செய்துள்ளது. இதனால் இரு நாடுகளும் பயன்பெறும்.
அதனுடன் உலகம் முழுவதும் பெரும் அளவில் பயன்பாடு சென்றடையும் என்றும் அமெரிக்கா நம்புகிறது.

ஆய்வு மையங்கள் கூட்டு:
இது தொடர்பாக டொரண்டோ நகரில் நடந்த சர்வதேச விண்வெளி மாநாட்டில், இரு ஆய்வு மையத்தின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சந்திப்பு:
நாசாவின் நிர்வாக அதிகாரியான சார்லஸ் போல்டன் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் மாநாட்டின்போது சந்தித்து பேசி கொண்டனர்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு:
இந்த சந்திப்பின்போது, செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்வதற்காக பணிக் குழு ஒன்றை அமைப்பது குறித்த விவாதமும் இடம் பெற்றது.

ஆவணங்களில் கையெழுத்து:
பூமியை குறித்து ஆய்வு செய்வதற்காக நாசா-இஸ்ரோ செயற்கைக்கோள் திட்டம் ஒன்றை செயல்படுத்துவது தொடர்பான இரு ஆவணங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.

சர்வதேச ஒப்பந்தம்:
வருங்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்வதற்காக, இருவரும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

நிசார் திட்டம்:
இந்த ஒப்பந்தம் மூலமாக "நாசா-இஸ்ரோ சிந்தெடிக் அபெர்சர் ராடார்" (நிசார்) என்ற திட்டத்தை செயல்படுத்த இரு ஆய்வு மையங்களும் பணியாற்றுவது குறித்து விரிவாக விளக்குகிறது. இந்த திட்டம் வருகிற 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராடார் மூலமாக ஆய்வு:
பூமி குறித்து ஆய்வு செய்வதற்காக உருவாகியுள்ள இந்த நிசார் கூட்டு திட்டம் இரு வெவ்வேறு ராடார் அலைவரிசைகளை பயன்படுத்தி ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான நில பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்யும் திறன் பெற்றது.

நில பரப்பில் மாற்றம்:
அத்துடன் உலகம் முழுவதும் நில பரப்பில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் விளைவுகள் மற்றும் அதன் தொடர்ச்சிகள் ஆகியவை குறித்தும் அளவிடும்.

இயற்கை ஆய்வுகள்:
சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள், பனி படலங்கள் சிதைவு மற்றும் இயற்கை பேரழிவுகள் ஆகிய முக்கிய விசயங்கள் குறித்த ஆய்வுகளும் இதில் இடம்பெறும்.

செவ்வாயில் வலம் வரும் தனித் தனி விண்கலங்கள்:
தற்போது நாசா தனது விண்கலங்கள் சிலவற்றை செவ்வாய்க்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் கியூரியாசிட்டி விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்து வருகிறது. இந்தியா முதல் முறையாக தனது மங்கள்யான் விண்கலத்தை சமீபத்தில்தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக வலம் வர வைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications