மீட்பு நடவடிக்கையில் தாலிபான்கள் தலையிட்டால் அமெரிக்க பதிலடி கடுமையாக இருக்கும்- ஜோ பிடன் எச்சரிக்கை
காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவதுதான் அமெரிக்கா இதுவரை சந்தித்த பெரிய சவால் என்று தெரிவித்துள்ள அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன், தாலிபான்கள் இந்த பணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான உடனடி பதிலடி வழங்கப்படும் என்று எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து நேட்டோ படைகள் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு உதவிகரமாக இருந்தவர்களும் தாலிபான்களின் தீவிர மத சார்புடைய கொள்கை ஏற்பில்லாதவர்களும், காபூல் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் மூலமாக பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக தப்பிச் செல்கின்றனர்.
அமெரிக்க விமானங்கள் இவர்களை அழைத்துச் சென்று, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் இறக்கி அங்கிருந்து பிற நாடுகளை சேர்ந்தவர்கள் என்றால் அந்த நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தானியர்கள் என்றால் அகதிகள் முகாம்களுக்கும் அனுப்பி வைக்கிறது.

வீடு வீடாக தாக்குதல்
இதனிடையே, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு உதவிகரமாக இருந்தவர்களின் வீடுகளுக்குள் தாலிபான்கள் புகுந்து தேடித்தேடி தாக்குதல் நடத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தங்களது எதிரிகள் வேறு எங்கும் தப்பிச் சென்று விடக்கூடாது என்று தாலிபான்கள் தீவிரமாக இருப்பதால் காபூல் விமான நிலையத்திற்கு வந்து அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி, தப்பியோட நினைப்பவர்களை பிடித்து செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அல்லது கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்கா பதிலடி கொடுக்கும்
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் திட்டவட்டமாக சில தகவல்களை தெரிவித்தார். காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக அமெரிக்க ராணுவத்தின் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினால் அதற்கு உடனடியாக மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் . அதேநேரம் தீவிரவாத எதிர்ப்பு மிஷன் விஷயங்களில் அமெரிக்கா இனிமேல் அதிகப்படியான கவனத்தை குவிக்காது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை, அமைதியை உருவாக்குவதற்காக எங்களது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்.

ஜி7 நாடுகள்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளின்கன், வரும் வெள்ளிக்கிழமை நட்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை மேற்கொள்வார். இதுதொடர்பாக ஏற்கனவே நான் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாட்டு பிரதமர்கள் மற்றும் அதிபர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். ஜி7 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தை அடுத்த வாரத்தில் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

அமெரிக்காவுக்கு கடினமான நடவடிக்கை
அல் கொய்தா இயக்கத்தை வேரறுப்பது அமெரிக்காவின் நோக்கம். அதை செய்து விட்டோம். எனவே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவது சரியான நடவடிக்கைதான். அல்கொய்தா அமைப்பு ஒழிக்கப்பட்ட பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருப்பதற்கு என்ன காரணம் இருந்துவிட முடியும்? ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக அமெரிக்க ராணுவம் போரில் ஈடுபட்டதால் தினமும் 150 மில்லியன் டாலர் முதல் 300 மில்லியன் டாலர் வரை செலவாகி கொண்டு இருந்தது. காபூல் நகரத்தில் இருந்து மக்களை மீட்டு கொண்டு செல்வது அமெரிக்க வரலாறு கண்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் கடினமான ஒரு வெளியேற்ற நடவடிக்கையாக அமைந்திருக்கிறது. இறுதியாக என்ன பலன் கிடைக்கும் என்பதை கூறி விட முடியாது. ஆனால் ஒரு அமெரிக்கர் கூட ஆப்கானிஸ்தானில் மீட்கப்படாமல் விடப்பட மாட்டார்கள் என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு உதவி செய்தவர்களும் மற்றும் நேட்டோ படைகளுக்கு உதவி செய்தவர்களும் அங்கே இருந்து வெளியே கிளம்ப வேண்டும் என்று நினைத்தால் அவர்களுக்கு அமெரிக்கா முழு உதவி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications