வீட்டுக் காவலில் உஸ்பெகிஸ்தான் "இளவரசி"... என்னாகும் எதிர்காலம்?
தாஷ்கன்ட்: உஸ்பெகிஸ்தான் சர்வாதிகாரி இஸ்லாம் கரிமோவ் மறைவைத் தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒரு புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. அதற்கக் காரணம், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள கரிமோவின் மகள் குல்னாரா கரிமோவாவின் நிலை என்ன என்பதால்.
42 வயதாகும் குல்னாரா, மறைந்த கரிமோவின் மூத்த மகள் ஆவார். 78 வயதாந கரிமோவ், தனது சொந்த மகளையே வீட்டுக் காவலில் வைக்கும் அளவுக்கு சர்வாதிகாரம் படைத்தவர். இவருக்கும், வட கொரிய சர்வாதிகாரி கிம்முக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது.
தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் உடனே சிறைதான், தண்டனைதான், நாட்டை விட்டு வெளியேற்றும் அதிரடி நடவடிக்ககளை எடுக்கத் தயங்காதவர் கரிமோவ். தனது மகள் தனது செல்வாக்கை மீறி வளர்ந்து வந்ததால்தான் அவரையே வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார் கரிமோவ் என்பார்கள்.
2 ஆண்டுகளாக வீட்டுக் காவல்
குல்னாரா கடந்த 2014ம் ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அது உஸ்பெகிஸ்தான் மக்களை அதிர வைத்தது. உஸ்பெகிஸ்தான் இளவரசி என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படுபவர் குல்னாரா. அவரையே வீட்டுக் காவலில் வைக்க கரிமோவ் உத்தரவிட்டால் மக்கள் அதிர்ந்தனர்.
"உஸ்பெக் இளவரசி"
தனது தந்தைக்கு எதிராக எதையும் குல்னாரா செய்யவில்லை. அவர் செய்த ஒரே தவறு தனது தந்தைக்கு நிகரான செல்வாக்குடன் வலம் வந்ததுதான். அதைக் கண்டு கரிமோவ் பயந்து போய் விட்டார் என்றும் எங்கே தன்னை ஓரம் கட்டி விட்டு மகள் ஆட்சியைக் கைப்பற்றி விடுவாளோ என்றும் அவர் அஞ்சியதாக கூறப்படுகிறது.
ஊழல் புகார்கள்
அதேசமயம், குல்னாரா மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் எழுந்ததால்தான் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல்கள் முன்பு கூறின. குல்னாரா பதவி ஆசை பிடித்தவர் என்றும் ரஷ்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உஸ்பெகிஸ்தானில் காலூன்ற பெருமளவில் லஞ்சம் வாங்கியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்வர்டில் படித்தவர்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் குல்னாரா. உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். கடைசியாக துண வெளியுறவு அமைச்சராக செயல்பட்டுள்ளார்.
பல் துறை அவதாரம்
பாடகியாகவும் வலம் வந்தவர் குல்னாரா. அத்தோடு பேஷன் டிசைனராகவும் இருந்துள்ளார். பல நாடுகளுக்குத் தூதராகவும் இருந்தார். உஸ்பெகிஸ்தானின் ஐ.நா. பிரதிநிதியாகவும் செயல்பட்டுள்ளார். உஸ்பெகிஸ்தான் ரேடியோ நிலையங்கள், டிவி நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டில் இருந்தன.
வெளியே வருவாரா?
தற்போது கரிமோவ் மரணமடைந்து விட்டதால் குல்னாராவின் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் தனது தந்தையின் இடத்திற்கு வருவாரா அல்லது கடைசி வரை வீட்டுக் காவலிலேயே இருப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.