டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமல்ல.. மறுப்பு தெரிவித்து.. இரங்கல் வெளியிட்ட தாலிபான்கள்
காபூல் : ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலின் போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், புலிட்சர் விருது வென்றவருமான டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். இந்நிலையில் டேனிஷ் சித்திக்கின் மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என்று தாலிபன்கள் மறுத்துள்ளனர். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை டேனிஷ் சித்திக் தனது புகைப்படங்கள் மூலம் உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார். கொரோனாவின்போது கங்கை ஆற்றில் கொட்டப்பட்ட உடல்களை உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றவர் டேனிஷ் சித்திக் தான்.
இதுமட்டுமின்றி டெல்லியில் விவசாய போராட்டத்தின் வீரியத்தை தன் ஒற்றை போட்டோவில் வெளிக்காட்டியிருந்தார். வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்தே சொந்த ஊருக்கு சென்றதை புகைப்படம் எடுத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் சித்திக். டெல்லி கலவரத்தில் போலீஸாரின் செயல்களை அப்பட்டமாக காட்டியதும் டேனிஷ் தான்.

டேனிஷ் சித்திக்
மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஆவார். இவர் ரோஹிங்கியா முஸ்லீம்களின் அவலத்தை புகைப்படம் எடுத்து உலகிற்கு தெரியப்படுத்தினார். இதன் காரணமாக புலிட்சர் பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில் அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

உயிரிழப்பு
கடந்த சில வாரமாக அங்கு தீவிரமாக செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர், ஆப்கானிஸ்தான் படைகளுடன் இணைந்து தினமும் அங்கு நடக்கும் போர் நிலவரங்களை புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு வந்தார். காந்தகார மாவட்டத்தில் ஸ்பின் போட்லாக் என்ற பகுதியில் நேற்று ராணுவத்தோடு சேர்ந்து செய்தி சேகரித்த போது டேனிஷ் சென்ற கான்வாய் மீது தாலிபான் படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் டேனிஷ் சித்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

எங்களுக்கு தெரியாது
இந்நிலையில் டேனிஷ் சித்திக்கின் மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என்று தாலிபன்கள் மறுத்துள்ளனர். தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் சிஎன்என்-நியூஸ் 18 இடம் கூறும் போது, "பத்திரிகையாளர் டேனிஷ் யாருடைய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது. யுத்த வளையத்திற்குள் நுழையும் எந்தவொரு பத்திரிகையாளரும் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபரை நாங்கள் சரியான முறையில் கவனித்துக்கொள்வோம். இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

ஆபத்தான நாடு
கொல்லப்பட்ட பத்திரிகையாளர் டேனிஷின் உடல் ஜூலை 19 அன்று மாலை 5 மணியளவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் (ஐ.சி.ஆர்.சி) ஒப்படைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நீண்ட காலமாக ஊடகவியலாளர்களுக்கு உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாகும். பத்திரிக்கையாளர்கள் படுகொலைகளுக்கு அதிகாரிகள் தலிபான்களை குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications